ஐசிசி உலக கோப்பையில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது புதிய பேட்ஸ்மேன் களத்திற்கு வர தாமதமானதால் டைம் அவுட் முறைப்படி வங்கதேச வீரர்கள் அவுட் கேட்டனர்.
அதற்கு அவுட் வழங்கி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் ஒரு விதி தான் டைம் அவுட் முறை.
அதாவது ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வர வேண்டும். அதிகபட்சம் 3வது நிமிடத்திற்குள் பந்தை எதிர்கொள்ள க்ரீஸில் இருக்க வேண்டும்.
அப்படி பேட்ஸ்மேன் களத்துக்கு வர தாமதமானால் எதிரணி கேப்டன் நடுவரிடம் டைம் அவுட் முறைப்படி அப்பீல் கேட்கலாம். இதற்கு நடுவர் விதி மீறப்பட்டதை கண்டுபிடித்தால் அந்த பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கலாம்.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய முன் வராததால் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்-ற்கு டைம் அவுட் முறையில் நடுவர்கள் அவுட் கொடுத்தனர்.
இதன் மூலம் ஏஞ்சலோ மேத்யூஸ் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 1988 ஆம் ஆண்டு ஆண்ட்ரு ஜார்டன் என்ற வீரர் களத்திற்கு வர தாமதமானால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது.
இதேபோன்று 1997 ஆம் ஆண்டு திரிபுரா, ஒரிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஹேமுலால் யாதவ் என்ற பேட்ஸ்மேனுக்கு டைம் அவுட் முறைப்படி அவுட் வழங்கப்பட்டது.
இதேபோன்று 2002 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பார்டர் மற்றும் பீரி ஸ்டேட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெஸ்பேட் ட்ரேக்ஸ் என்ற வீரருக்கு மைதானத்திற்கு வர தாமதமானதால் அவுட் வழங்கப்பட்டது.
இதேபோன்று 2003 ஆம் ஆண்டு நாட்டிங்காம்சியர் மற்றும் துர்ஹாம் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் ஏஜே ஹாரிஸ் என்ற பேட்ஸ்மேனுக்கு டைம் அவுட் வழங்கப்பட்டது.
கடைசியாக 2013 ஆம் ஆண்டு ரியான் ஆஸ்டின் என்ற வீரருக்கு உள்ளூர் போட்டி ஒன்றில் டைம் அவுட் வழங்கப்பட்டது.