காரில் வேறு இடங்களுக்கு பயணத்தை தொடங்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான சாலை விபத்துகளை தவிர்க்கலாம்.
கார் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் சூட்டை குறைக்க ஒவ்வொரு காரிலும் கூலன்ட் (Coolant) எனும் கூலிங் சிஸ்டம் இருக்கும். கூலன்டின் திரவ மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைந்தால் இன்ஜின் அதிக சூடாகி முடங்கி விடும்.
எனவே, ஒவ்வொரு முறை பயணத்தை தொடங்கும்போதும் காரில் கூலன்ட் அளவை சரிபார்க்க வேண்டும். அதேபோல், ரேடியேட்டரை சுற்றியுள்ள பல்வேறு குழாய்களில் கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் தார் சாலைகளில் வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் வாகனம் ஓட்டும் போது டயர்களின் வெப்பநிலையும் உயரும்.
இதனால், வாகனத்தை வேகமாக இயக்கும் போது அதிக வெப்பம் ஏற்பட்டு டயர் வெடித்து விபத்து ஏற்படலாம். எனவேதான் டயர்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு காற்று எப்போதும் இருக்க வேண்டும்.
நீண்ட தூர பயணங்களின் போது எப்போதும் வாகனத்தின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை சோதித்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், காரில் வயரிங் சேதமாகியிருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, வாகனத்தினுள் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
வெப்பம் அதிகமாக இருக்கும் போது, ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் வாகனத்தை வசதியாக ஓட்ட முடியாது.
வாகனத்தில் உள்ள ஏசி சிஸ்டம் தொடர்பான கண்டன்சர், ஏர் ஃபில்டர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வராது. எனவே, கண்டன்சர் மற்றும் ஏர் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.