நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் வியர்வை முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், காரமான உணவுகள், மது, மருந்துகள் போன்றவை வியர்வையை உண்டாக்கும் சில காரணிகள்.
உடலின் வெப்பநிலை சராசரியை விட உயரத் தொடங்கும் போது அதை குறைத்து வெப்பநிலையை சமநிலையில் வைக்க உடலில் வியர்வை சுரப்பிகள் செயல்பட துவங்கும்.
வியர்வை சுரப்பிகள் உடலில் இருந்து பெரும்பாலும் தண்ணீர் மற்றும் சோடியம் போன்ற பிற தாதுக்களை உற்பத்தி செய்து இறுதியில் தோலில் வியர்வை துளிகள் உருவாக வழிவகுக்கிறது.
வியர்வை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதிகமாக கவலைப்படும் போது அல்லது அதிக பதட்டத்தை உணரும் போது வியர்வை சுரப்பிகள் அதிக வியர்வையை உண்டாக்கும்.
அதேபோல, அவ்வப்போது வியர்வையுடன் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் உடல்நலனில் ஏற்படும் சிறிய மாற்றம் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு கர்ப்பிணித் தாய் முதல் மூன்று மாதங்களுக்கு இரவில் வியர்வையால் ஏற்படும் சிரமங்களை அனுபவிக்க கூடும்.
அதிக உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வியர்வை உடலில் உப்பு போன்ற வெள்ளை நிற படிமத்தை ஏற்படுத்தும். இதனால் உடலுக்கு தேவையான சோடியம் பற்றாக்குறை ஏற்படலாம்.
எனவே, உடற்பயிற்சியின் போது ஏற்படும் சோடியம் இழப்பின் அளவை நிரப்ப அதனை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க வேண்டியது அவசியமாகும்.
காஃபின் குடிப்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதோடு, வியர்வை சுரப்பிகளின் செயல்பாடுகளை அதிகப்படுத்தி வியர்வையை உண்டாக்கும். காபி குடிக்கும் போது இது போன்ற மாற்றங்களை கண்டால் அந்த காபியை தவிர்க்கவும்.
இயல்பை விட அதிக அளவில் வியர்வை ஏற்படுவதற்கு நீரிழிவு, தைராய்டு செயலிழப்பு, இதய நோய் மற்றும் மாதவிடாய் போன்ற சில உடல்நல குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.