சீனாவின் மாஸ்டர்பிளான்.. உலக நாடுகளை இணைக்கும் "தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்''.. முழு பின்னணி!
பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) எனப்படும் திட்டத்தை தற்போது அந்த நாடு தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க ஒரு தனி நாடு செயல்படுத்த போகும் மிகப்பெரிய திட்டமாக இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) இருக்க போகிறது.
இந்தியா சீனா இடையே தற்போது எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை இந்தியா தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று சீனா முதலில் கருதியது.
ஆனால் இந்தியாவின் ராஜாங்க ரீதியான பலம் காரணமாக தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தது. இதுதான் இந்தியா மீதான சீனாவின் கோபத்திற்கு காரணம் ஆகும். அது என்ன தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம்?... இந்த விரிவான கட்டுரையை படியுங்கள் புரியும்!
என்ன மாதிரியான திட்டம்?
உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம். 2013ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 160 நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. சீனா அல்லது வேறு ஒரு தனி நாடு உலகில் அறிவித்ததிலேயே இந்த திட்டம்தான் பெரிய திட்டம் ஆகும். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் இதுவாகும்.
இந்த திட்டத்தை 2013ல் ஜி ஜிங்பிங் இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் பயணத்தின் போது அறிவித்தார். இதில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கும். ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கும். இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் அந்நாட்டு அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது.
சீனா என்ன செய்யும்?
இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம்.
பெயர் மாற்றியது
முதலில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்திற்கு ஒன் பெல்ட் ஒன் ரோட் ஸ்டிரேட்டஜி (One Belt One Road Strategy) என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் ஸ்டிரேட்டஜி என்ற வார்த்தை பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். அதேபோல் ஒன் என்ற வார்த்தையும் பல நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கும். இது பெரிய எதிர்ப்புகளை ஏற்படுத்தும் என்று சீனா அஞ்சியது. இதனால் திட்டத்தின் பெயர் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்று மாற்றப்பட்டது.
மூன்று விதமாக பிரிக்கிறது:
இந்த திட்டத்தை சீனா மொத்தமாக மூன்று விதமாக பிரிக்கிறது.
சில்க் ரோட் எக்கனாமிக் பெல்ட் (Silk Road Economic Belt) - இது சீனா சார்பாக உலகில் சாலை வழியாக போடப்பட உள்ள போக்குவரத்து பாதைகள் ஆகும். அதன்படி சாலைகள் மூலம் ஏசியாவில் உள்ள முக்கால்வாசி நாடுகளை சீனா இணைக்கும்.
மேரிடைம் சில்க் ரோடு (Maritime Silk Road) - ஆசியா மட்டுமின்றி மற்ற கண்டங்களில் உள்ள நாடுகளை சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டமாகும் இது.
ஐஸ் சில்க் ரோடு (Ice Silk Road) - இது சீனாவையும் ஆர்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் திட்டம் ஆகும். ரஷ்யா - சீனா இரண்டு நாடும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
எப்போது முடியும்?
இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) 2049ல் முடியும். சீனாவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது என்ன வருடம் என்று கண்டிப்பாக தெரியும். ஆம் சீனாவின் நூற்றாண்டு வருடம் ஆகும் இது. சீனா தனது 100ம் ஆண்டு கொண்டாட்டத்தை செயல்படுத்தும் போது, தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) அமலுக்கு வந்து இருக்கும். இதற்காக தற்போது சீனா இந்த திட்டத்தின் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் பின்னணி?
இந்த திட்டத்தை சீனா செயல்படுத்த பின் வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது.
உலக நாடுகள் அனைத்தையும் சீனாவோடு இணைப்பது.
பொருளாதார ரீதியாக உலகம் முழுக்க இருக்கும் சந்தையை ஆக்கிரமிப்பது.
உலக நாடுகளின் சந்தையை தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) மூலம் இணைத்து, அங்கு சீன பொருட்களை ஏற்றுமதி செய்வது.
உலகை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவது. முக்கியமாக பொருளாதார ரீதியான கட்டுப்பாடு.
வியாபாரம், விற்பனை, பொருளாதாரம்தான் இதன் முதல் நோக்கம்.
பெரிய வர்த்தகம்
இந்த திட்டம் மூலம் மொத்தம் 60% மக்கள் இணைக்கப்படுவார்கள். ஆம் உலகம் முழுக்க இருக்கும் 60% மக்கள் இதன் மூலம் இணைக்கப்படுவார்கள். 35% உலக பொருளாதாரம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 40% உலக மார்க்கெட் சந்தை இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 75% கடல் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும்.
வரலாற்றில் பெரிய திட்டம்
உலகில் இதுவரை இப்படி ஒரு திட்டத்தை எந்த ஒரு நாடும் அறிவித்தது இல்லை. மொத்தம் 160 நாடுகளில் முதல்கட்டமாக இந்த திட்டத்தை சீனா கொண்டு வருகிறது. அதன்படி போக்குவரத்தை மட்டும் சீனா இதன் மூலம் ஏற்படுத்தாது. கட்டமைப்பு வசதிகளையும் இந்த திட்டம் மூலம் சீனா உலகம் முழுக்க ஏற்படுத்தும். சீனா இதனால் வெளிநாடுகளில் உள்கட்டமைப்பு வசதி, கல்வி, கட்டுமானப் பொருட்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை, ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், மின்சார துறை மற்றும் இரும்பு மற்றும் எஃகு துறை என்று அனைத்திலும் முதலீடு செய்யும்.
ஏற்கனவே தொடங்கிவிட்டது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்த தொடங்கிவிட்டது. அதன்படி சீனா ஏற்கனவே நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது, சாலை அமைப்பது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்று தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தை செயல்படுத்திவிட்டது.
அதேபோல் நைஜீரியா,ஆஸ்திரேலியா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் , இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகளில் ஏற்கனவே தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) மூலம் சீனா முதலீடுகளை செய்துவிட்டது. அங்கு நிறுவனங்களை அமைந்துவிட்டது. 138 நாடுகளில் இதுவரை சீனா இது தொடர்பாக முதலீடு செய்துள்ளது.
நிதி எங்கிருந்து வருகிறது
மொத்தம் மூன்று விதமாக இந்த திட்டத்திற்கு சீனா நிதியை பெறுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்த செலவு 8 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
அதன்படி இதற்காக சில்க் ரோட் பண்ட் (Silk Road Fund) நிதியை சீனா உருவாக்கி உள்ளது. இதற்காக ஏற்கனவே 40 பில்லியன் டாலர் நிதியை சீனா ஒதுக்கி உள்ளது.
அதேபோல் ஏசியன் இன்பிராஸ்டிரெக்ச்சர் வங்கி (Asian Infrastructure Investment Bank - AIIB) எனப்படும் வங்கி மூலம் திட்டத்திற்கான நிதியை பெறுகிறது.
உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து அதன் மூலம் வரும் வட்டி நிதியாக மாற்றப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிடம் கடன் பெறுவது.
ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்
சீனாவின் அழுத்தம் காரணமாக இந்த திட்டத்திற்கு நிறைய நாடுகள் ஆதரவு தெரிவிக்கிறது. 130 நாடுகள் இதற்கு இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யா இதில் சீனாவின் பங்குதாரராக சேர்ந்துள்ளது. அதேபோல் இத்தாலி சீனாவிற்காக இதில் முதலீடு செய்துள்ளது.பிலிப்பைன்ஸ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. 18 அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்ரிக்க நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. கனடா, கிரீஸ், குரேஷியா, கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவிக்கிறது.
எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள்
பெரிய அளவில் அதிக நாடுகள் இதை எதிர்க்கவில்லை. இந்த திட்டத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை சீனாவின் காலணி ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கான திட்டம். உலக நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வர சீனா இப்படி செய்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் சீனா உலக நாடுகளை ஏமாற்றுகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலியா, மலேசியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இந்தியாவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளது .
கடும் கோபத்தில் சீனா
இந்த திட்டத்தை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருவதால்தான் இந்தியா மீது சீனா கடுமையான கோபத்தில் இருக்கிறது. ஆசியாவில் சீனாவின் வளர்ச்சியை, கனவை தடுக்கும் வகையில் இந்தியா வளர்ந்து நிற்கிறது. இதனால் சீனா இந்தியாவை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. பொருளாதார ரீதியாக இந்தியாவை வீழ்த்த முடியவில்லை என்பதால், போர் மற்றும் ராணுவ ரீதியாக இந்தியாவை முடக்க சீனா நினைக்கிறது.
சண்டைக்கு மிக முக்கிய காரணம்
ராணுவ ரீதியாக இந்தியாவிற்கு செக் வைக்கவே சீனா இப்போது இப்படி. இந்தியா தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளும் வரை சீனாவின் அத்துமீறல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆசியாவில் மட்டுமல்ல உலகிற்கே இனி நாங்கள்தான் எல்லாம் என்று தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் மூலம் சீனா நிறுவ முயற்சிக்கிறது. அதை துணிச்சலாக எதிர்க்கொள்ளும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது.