10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்
பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் என்ற மிகப்பெரிய பகுதியில், சம கால உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்து கொண்டு இருக்கிறது. உய்குர் இனத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம், ஆண்கள், முகாம்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் உள்ளனர். முஸ்லீம் பெண்கள், சீன ஆண்களால், பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video
தொடர்ந்து நடைபெறும் இந்த அநியாயம், அமெரிக்காவின் தீவிர கண்டிப்புக்கு பிறகே இப்போது உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சீனாவின் மேற்கு எல்லையிலுள்ள பகுதி ஜின்ஜியாங். மங்கோலியா, ஆப்கானிஸ்தான் என மொத்தம், 8 நாடுகள் இதனுடன் எல்லையை பகிர்கின்றன.
1949ம் ஆண்டு முதல், ஜின்ஜியாங் பகுதி, சீனாவின் ஆதிக்கத்தின்கீழ் வருகிறது. ஹாங்காங் போலவே, சுயாட்சி பகுதியாகத்தான் அறிவித்திருந்தது சீனா. அப்போது அங்கு 95% உய்குர் இன முஸ்லீம் மக்கள் இருந்தார்கள். இந்த பகுதியை கிழக்கு துருக்கிஸ்தான் என்றுதான் அப்போது அழைப்பார்கள்.
அங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த நிலையில், 2013ல் இருந்து மிக அதிக அளவுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
தீவிரவாதத்தை காரணம் காட்டும் சீனா
அதற்கு சீனா கூறிய முக்கியமான காரணம் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது என்பது. தீவிரவாத எண்ணத்தை வேரறுக்க, இந்த பகுதியை கட்டுப்படுத்துகிறோம் என்று அறிவித்த சீனா, 2013 முதல் 2015 உட்பட்ட பகுதியில் இந்த பகுதி முழுக்க சிசிடிவி கேமராவை கொண்டு வந்து விட்டது.
சாப்பிடுவது முதல், படுத்துறங்குவது வரை அனைத்தும் சிசிடிவியால் கண்காணிக்கப்பட்டன. இப்படி கண்காணித்தால், பெண்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
10ல் ஒரு வீட்டில் ஆட்கள் கிடையாது. மாயமாகிறார்கள். ஆண்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் முகாம்கள் என்ற பெயரில் மிகப்பெரிய சிறைக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இஸ்லாமை மறக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை படிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் தொழுகை நடத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு உரித்தான ஆடைகளை அணியக் கூடாது, எக்காரணம் கொண்டும் அரபி மொழியில் பேசக்கூடாது, எக்காரணம் கொண்டும் தொழுகைக்கான பாடல்களைப் பாடக்கூடாது, இப்படி பலவிதமான தடைகள் அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கு 5 வருட முகாம்
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்கள் வெளியே வரும்போது கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட சீனர்களாக இருப்பார்களே தவிர இஸ்லாமியர்களாக இருக்க முடியாது. இதை நவீன இன சுத்திகரிப்பு என்றும் சொல்லலாம். இலங்கையில் எப்படி தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுகிறார்களோ, அதுபோலத்தான், இங்கு உய்குர் இன அழிப்பு நடக்கிறது.
ஆண்கள் பெரும்பாலானோர் முகாம்களுக்கு கொண்டு சென்ற பிறகு, உய்குர் இன, பெண்களுக்கு கட்டாய கருத்தடை என்பது செய்யப்படுகிறது. அவர்கள் யாருமே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. இரண்டுக்கும் அதிகமான குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட நம்மூர் மதிப்பில், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். உய்குமார் இன பெண்கள் சீனர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு திருமணம் செய்யாத பெண்கள் உடலில், கருத்தடை சாதனங்கள் பொருத்தப்படுகின்றன.
பெண்களை நாசம் செய்யும் சீனர்கள்
மேலும் 'ரிலேட்டிவ்' என்ற பெயர்களில், ஹன் (han) சீனர்கள் ஆண்கள் இல்லாத பெண்களின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆண்கள் இல்லாத வீடுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அங்கு செல்கிறார்கள். இவர்கள் கிட்டத்தட்ட 1 வாரம் அங்கேயே தங்கியிருந்து உண்டு, உறங்கி பழகுகிறார்கள். இதை எதிர்த்து அந்த பெண்களால் கேட்க முடியாது. கம்யூனிஸ்ட் கொள்கைகளை அப்போது அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்போது அந்த பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கட்டில் வரை உறவு நீள்கிறது. அப்படி இணக்கம் காட்டாத பெண்களை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துவிடுகிறார்களாம். விருந்தாளி என்ற பெயரில் வீட்டுக்குள் போகும் சீன ஆண்கள், உய்குர் முஸ்லீம் பெண்களுடன் ஒரே படுக்கையில் கட்டாயப்படுத்தி படுத்துக்கொள்ளும் அநியாயம் நிகழ்கிறது என்று Radio Free Asia (RFA) செய்தி வெளியிட்டுள்ளது.
ஆண்கள் முகாம்களில், பெண்களுடன் சீனர்கள் நெருக்கம் என இரட்டை நெருக்கடி மூலம், அந்த இனத்தையே மாற்றுவது சீன அரசின் நோக்கம்.
இன்னும் ஐந்து, பத்து வருடங்களுக்கு இப்படியே நிலைமை தொடரப்போகிறது. ஒவ்வொரு ஐந்து வருடங்கள் 10 லட்சம் நபர்களை கொண்டு வந்து கொண்டு வந்து கிட்டத்தட்ட அனைத்து உய்குர் மக்களையும் சீனர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் சீனர்கள் குறிக்கோள்.
இவ்வளவுதானா அப்படின்னு கேட்டால் இல்லை என்பதே பதில். உய்குர் பெண்களுடைய முடிகளை வெட்டி எடுக்கப்படுகின்றன. அவற்றை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கிறது சீனா. அதுமட்டுமல்ல, கேம்ப்களில் உள்ள ஆண்களின் உடல் உறுப்புகளையும் எடுக்கிறது. 2015-2016ல் இது ஐநா சபையில் மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக மாறியது. உடல் உறுப்புகளை எடுக்கிறீர்களா என்று ஐநாவில் கேள்வி எழும்பியபோது, ஆம் என்றது சீனா. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை உடலில் இருக்கும் உடல் உறுப்புகளை எடுக்கிறோமே தவிர, பிற மனிதர்களுடைய உடல் உறுப்பை எடுப்பதில்லை அப்படி என்று கூறியது சீனா.
சீனாவில் மரண தண்டனை
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், அதிகளவு மரண தண்டனை கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சீனாதான். அதுவும் குறிப்பாக, உய்குர் மக்களுக்கு மரண தண்டனை, அதிகமாக கொடுக்கப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உய்குர் மொழியில் பேசக் கூடாது என்ற கெடுபிடியும் அங்கே உள்ளது. ஒரு மொழியை அழித்து விட்டால் அவனுடைய கலாசாரமும் மறைந்துவிடும் என்பது சீனாவுக்கு தெரிகிறது. நேபாளத்திலும் சீன மொழி சமீபகாலமாக அதிகமாக கற்பிக்கப்படுகிறது.
2039லிருந்து 2050க்குள் மிகப்பெரிய வல்லரசாக மாறி விட வேண்டும் என்பது சீனா திட்டம். அவர்களுக்கு எதிராக கலகக்குரல் எதுவும் அவர்கள் நாட்டில் இருந்து வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 1949ல் 95% உய்குர் மக்களாக இருந்த நிலையில், அது வெறும் 45 சதவீதமாக குறைந்து இருக்கிறது இப்போது. இஸ்லாமிய மக்கள் இவ்வளவு பெரிய துன்பத்திற்கு உள்ளாகி வரும் நிலையிலும், சீனாவை தட்டிக் கேட்காமல் அதோடு நட்பு பாராட்டி, நிதி உதவி பெற்று வருகிறது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக மட்டும் முஷ்டியை தூக்குகிறது. இத்தனை துன்பங்களை அனுபவிக்கும் இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் குரல் கொடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு சீன நிறுவனம் உட்பட நான்கு உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு பதிலடியாக இந்த விவகாரம் பற்றி பேசும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சில எம்பிக்களுக்கு சீனா தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்தது. இதன்பிறகு இப்போதுதான் உய்குர் மக்கள் துயரம் உலக அளவில் பேசப்பட ஆரம்பித்துள்ளது.