சூரிய கிரகணம் என்றால் என்ன.. அது எப்படி நிகழ்கிறது?.. சில நம்பிக்கைகளும்.. உண்மைகளும்
சூரிய கிரகணம் வந்தாலே ஏதோ வில்லங்கம்தான் என்பது போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.
சென்னை: சூரிய கிரகணம் வருடா வருடம் வானத்தில் நடக்கிற நிகழ்வுதான் என்றாலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னால் சூரிய கிரகணத்திற்கும் வைரஸ் பரவலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ அப்படிங்கிற பயத்தினாலேயே பலரும் கிரகணம் பற்றி ஆவலாக பேச ஆரம்பிச்சிருக்காங்க.
பொதுவா சூரிய கிரகணம் ஏன் நடக்குதுன்னு ஒரு கேள்வி இருக்கு. கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள், புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம்.
சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.
சூரிய கிரகணம் ஏன் வருது தெரியுமா
பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது. முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். சூரியன் ரொம்ப பெரியது நிலா எப்படி மறைக்க முடியும் என்று கேட்கலாம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும்.
முழு சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தின் முதல் வகை முழு சூரிய கிரகணம். இந்த நிகழ்வு நடக்கும் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர் கோட்டில் இருக்கும். சூரியனை விட சந்திரன் மிக மிக சிறிய அளவுடையது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை மற்றும் சூரிய ஒளி பூமியை அடையாமல் முழு இருட்டாக இருக்கும். இரவு போல காட்சி அளிக்கும்.
பகலில் சூரிய வெளிச்சம் தெரியாமல் போனால் மனிதர்களுக்கு குழப்பம் வராது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு இடையே சில குழப்பங்கள் வரும். பூத்த மலர்கள் கூட மறுபடியும் வாட ஆடம்பித்து விடுமாம். ஓநாய்கள் ஊளையிடும். பறவைகள் தங்களின் கூடுகளுக்கு திரும்பி போக ஆரம்பித்து விடும்.
பகுதி சூரிய கிகரணம்
இரண்டாவது வகை சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். பகுதி சூரிய கிரகணத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். இதில் சூரியனின் ஒரு மிகச் சிறிய அல்லது ஒரு பகுதியை மறைக்கும் அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம்
சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இதுதான் கங்கண சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் இதுதான் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியும், ஜூன் 21ஆம் தேதியும் நிகழ்ந்தது. வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது, அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும். சந்திரனால் மறைக்கப்படாத பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது. இப்படி நெருப்பு வளைய வடிவத்தில் வரக்கூடிய சூரிய கிரகணத்தை வருடாந்திர சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள்.
என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை
வளைய சூரிய கிரகணத்திற்கும், முழு சூரிய கிரகணத்திற்கும் என்ன வேற்றுமை என்று கேட்கிறீர்களா? நிலா நம்ம பூமிக்கு பக்கத்தில் வரும் போது சூரிய கிரகணம் நடந்தால் அது முழு சூரிய கிரகணம். நிலா நம்ம பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது சூரிய கிரகணம் நடந்தால் அது கங்கண கிரகணமாக இருக்கும். சூரியனை முழுவதுமாக நிலவினால் மறைக்க முடியாது. இந்த கங்கண சூரிய கிரகணத்தை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும்,கடந்த மாதம் ஜூன் 21ஆம் தேதியும் பார்த்தோம். இதே போன்று 2031 மே மாதம் 21ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், அப்போது மதுரை,தேனி போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வளைய கங்கண சூரிய கிரகணத்தை நம்மால் பார்க்க முடியும்னு வானியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சூரிய கிரகணத்தால் முடிவுக்கு வந்த போர்
585 BC மே 28ஆம் தேதி இதை விட ஒரு முக்கியமான விசயம் முழு சூரிய கிரகணத்தப்ப நடந்திருக்கு ஆறு வருடம் நடந்த போர் நின்று போயிருக்கு. லிடியா மெடாஸ் நாடுகளுக்கு இடையே ஆறு வருடங்களாக நடந்த போரை நிறுத்தியது சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் நிகழ்ந்த போது இரு நாட்டு போர் வீரர்களும் பயந்து போய் சண்டையை நிறுத்தி விட்டு சூரியனை பார்த்து வேண்டுதல் செய்தார்களாம். இனிமே நாங்க சண்டை போடமாட்டோம் சூரியன் உதிக்கணும்னு சொன்னாங்களாம். கிரகணம் முடிந்து சூரியன் வந்த உடன் சொன்ன மாதிரியே போரை முடித்துக்கொண்டார்களாம். இது மாதிரி கிரகணத்தால் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து இருக்கு.
கிரகணங்களும் நம்பிக்கையும்
சீனாவில டிராகன் சூரியனை சாப்பிடுவதாக நம்பிக்கை இருக்கு. நம்ம ஊர்ல சூரியகிரகணம் நிகழும் போது ராகுவோ, கேதுவோ சூரியனை விழுங்குவதாக நம்பிக்கை இருக்கு. செவ்விந்தியர்கள் என்ன சொல்றாங்கன்னா சூரியன் நிலாவை வானத்தில் இருந்தப்ப சூரியனை கரடி கடிச்சு சாப்பிட்டது. சூரியன் பயந்து கரடிகிட்ட சொல்லிச்சாம் நான் நெருப்பா கொதிக்கிறேன். என்னைய சாப்பிடுறதை விட நீ அதோ வெள்ளையா இருக்கு பாரு அவளை சாப்பிட்டா ஜில்லுன்னு இருக்கும் சொல்லிச்சாம். கரடியும் மெதுவா நடந்து நிலா கிட்ட வர்றதுக்கு 15 நாள் ஆயிருச்சாம். அதனாலதான் சூரிய கிரகணம் நடந்து சரியா 15 நாள்ல சந்திர கிரகணம் நடக்குது.
முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம்னு மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் பார்க்கிறோம். ஜூலை 5ஆம் தேதி கூட பெனுப்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. மொத்தத்தில கிரகணங்கள் நிகழும் போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் மனித உடம்புக்கு ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றுதான் யாருமே கிரகண நேரத்தில வெளியே வரவேண்டாம்னு சொல்றாங்க. கோவில்களையும் மூடி வைக்கிறாங்க. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரும்னு சொல்லித்தான் கிரகண நேரத்தில கர்ப்பிணிகளை கூடுதல் எச்சரிக்கையோட இருக்கச் சொல்றாங்க.
அதனால சூரிய கிரகணம் வரும் போது சூரியனை பார்க்காதீங்க. சந்திர கிரகணம் வரும் போது சந்திரனை பார்க்காதீங்க. கிரகணம் நடக்கிறப்ப பிரியாணி சாப்பிடறது எல்லாம் அவங்கவங்க நம்பிக்கையை பொறுத்த விசயம்.