தைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...!!
டெல்லி: இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பூட்டான், நேபாளம், ஹாங்காங், தைவான் என்று சிக்கல்கள் ரவுண்டு கட்டி நிற்கின்றன. இந்த எல்லா பிரச்சனைகளையும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையேயும் சீனா சிங்கிளாக நின்று கையாண்டு வருகிறது.
சீனாவை எப்படி கையாளலாம் என்று தற்போது எதிரி நாடுகள் சதா சிந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவுக்குத்தான் தற்போது பெரிய அளவில் சீனாவிடம் இருந்து சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம் என்று தன்னுடன் இணைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் இந்தியா, சீனா எல்லையில் இந்தியாவுக்கு உள்பட்ட கல்வான் பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவ வீரர்கள் கொன்றனர். இது இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இந்தியா ராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
Recommended Video
சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக தைவானுடன் நெருக்கம் காட்டுவது என்று இந்தியா முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி, திபெத் விஷயத்தில் சீனாவுக்கு எதிராக கொடி உயர்த்தி இருக்கும் தலாய் லாமாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா அமைதியாக இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பில் தைவானுக்கு பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுத் தர வேண்டும் என்பது அந்த நிலைப்பாடு. இந்தியாவுக்கு எதிராக சீனா பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கும்போது இந்தியாவும் உலக அரசங்கில் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையும் இந்தியா கணக்கில் கொண்டுள்ளது.
தைவானுடன் ராஜதந்திர உறவு
எப்போது எல்லாம் சீனா, இந்தியா இடையே கசப்புணர்வு வருகிறதோ அப்போது மட்டும் தைவான் குறித்து யோசிக்காமல், எப்போதும் தைவானுடன் வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தியாவுக்கு வல்லுநர்களால் கூறப்பட்டது. இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பும் நாடுகளில் தைவானும் ஒன்று. எனவே, சீனாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு சீனாவை சார்ந்து இருக்காமல் இந்தப் பொருட்களை தைவானிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்
இந்தியாவில் பெரிய அளவில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை நடத்தி வரும் பாக்ஸ்கானுக்கு சீனா, இந்தியா கசப்புணர்வால் நல்ல எதிர்காலம் இருக்கிறது. தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் பெரிய அளவில் இந்தியாவில் ஏற்கனவே கால் பதித்துள்ளது. இந்திய, சீன சமீபத்திய பிரச்சனைக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் தலைவர் லியு யாங் வே இதை சுட்டிக் காட்டி பேச தவறவில்லை.
இந்த நிலையில்தான் அருணாசலப்பிரதேசம் முதல்வர் பிரேம காண்டு இந்திய ராணுவ வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, ''இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை, இந்தியா - திபெத் எல்லைப் பகுதி என்று குறிப்பிட்டார். அதாவது, அருணாசலப்பிரதேசத்தை ஒட்டி இருக்கும் எல்லைப் பகுதி ஒரு காலத்தில் இந்தியா - திபெத் எல்லையாக இருந்தது. திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அது, இந்திய - சீனா எல்லை என மாறியது. சீனா இதை ''தென் திபெத்'' என்றும் அழைத்து வந்தது.
இதையேதான் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்த திபெத் தன்னார்வலர்களும் தெரிவித்து இருந்தனர். இந்திய - திபெத் எல்லை என்றுதான் அழைக்க வேண்டும். இந்தியா - சீனா எல்லை என்று அழைக்கக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து அருணாசலப்பிரதேசம் முதல்வரும் அதையே சுட்டிக் காட்டி இருந்தார். ஆனால், இதுவரை இதற்கு சீனா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
சீனாவுக்கு திபெத் நெருக்கடி
இந்தியாவை ஆத்திரமூட்டுவதற்கு எவ்வாறு சீனா நேபாளத்தையும், பாகிஸ்தானையும் இணைத்துக் கொள்கிறதோ அதேபோல், சீனாவுக்கு இடஞ்சல் கொடுக்க திபெத் விஷயத்தை இந்தியா கையில் எடுக்க வேண்டும். சீனாவுக்கு எதிரான திபெத் ஆதரவாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது. தலாய் லாமா மற்றும் திபெத்துக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தியா முன்பு வைக்கப்பட்டுள்ளது.
திபெத் கார்டை இந்தியா கையில் எடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சீனாவை இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுப்பாக்கி உள்ளது. 2016, டிசம்பரில் தலாய் லாமா ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். நோபல் பரிசு பெற்றவர்களை கவுரவிப்பதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தார். மேலும், தாவாங் பகுதியில் பயணம் மேற்கொள்ள தலாய் லாமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவங்களுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
மத்திய திபெத் நிர்வாகி லாப்சாங் சன்கை, 2017ல் டோக்லாம் சர்ச்சை நடந்து வரும்போது, லடாக் பகுதியில் இருக்கும் பாங்க் சோ பகுதியில் திபெத் கொடியை ஏற்றுவதற்கு இந்தியா அனுமதித்து இருந்தது. இதுவும் சீனாவை கடுப்பாக்கியது. தற்போது லாப்சாங் சன்கை திபெத்தில் இல்லை. வேறு நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவங்களுக்குப் பின்னர் சீனாவை மிரட்ட திபெத் பிரச்சனையை இந்தியா பிரதானமாக எடுத்துக் கொள்ளவில்லை. தலாய் லாமாவின் 60வது பிறந்த நாளில் எந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த முடிவைத்தான் சமீபத்தில் தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாடிய போதும், பிரதமர் மோடி எடுத்து இருந்தார். ட்விட்டரில் தலாய் லாமா பிறந்த நாள் டிரண்ட் ஆகி வந்தது. ஆனால், மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்தியா, சீனா இடையே கல்வான் பிரச்சனை முடிந்த தருணம் அது.
இந்த நிலையில்தான் சீனாவுக்கு எதிராக திபெத் பிரச்னையை இந்தியா எழுப்ப வேண்டும் என்று அரசியல் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்படி இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தை, பாகிஸ்தானை சீனா தூண்டிவிடுறதோ அதுபோல், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தற்போது, சீனாவுக்கு அமெரிக்காவில் இருந்தும் நெருக்கடி முற்றி இருப்பதால், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொண்டு தைவானுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவையும் இந்தியா எடுக்க வேண்டும்.
பூட்டானுக்கும் நெருக்கடி
பூட்டானின் கிழக்குப் பகுதியில் அருணாசலப் பிரதேசம் உள்ளது. இதை ஒட்டிய பகுதிகள் பூட்டானுக்கு சொந்தமானது. ஆனால், சீனா அதை 'தென் திபெத்' என்று கூறி புதிய அஸ்தரத்தை தூக்கி வீசியுள்ளது. இந்த விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்று சீனா மறைமுகமாக இந்தியாவை சுட்டிக் காட்டி இருந்தது. சீனாவின் எண்ணம் எப்போதும் அருணாசலப்பிரதேசத்தை அஸ்திரமாக எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு இடஞ்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான்.
பூட்டானுக்கு சொந்தமானது டோக்லாம் பகுதி. இந்தியா, சீனா, பூட்டான் எல்லையில் அமைந்து இருக்கிறது. இந்தப் பகுதி பூட்டானுக்கு சொந்தமானது. இந்த வழியே சாலை அமைக்க சீன முயற்சித்தது. ஆனால், இதற்கு இந்தியா அனுமதிக்கவில்லை. பூட்டனுக்கு ஆதரவாக ராணுவத்தை சிக்கிம் வழியாக இந்தியா அனுப்பி சீன வீரர்களை திருப்பி அனுப்பியது. இங்கு சீனா சாலை அமைத்தால், அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும். இந்தியாவுக்குள் சீனாவால் எளிதாக நுழைய முடியும். பூட்டானுடன் சீனாவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியவில்லை. இந்தியா இந்த இடத்தை கோரவில்லை என்றாலும், பூட்டானுக்கு வலுக்கட்டாயமாக ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.
பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு உள்பட்ட அருணாசலப்பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான நிலப்பகுதியை சீனா ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. சீனா எப்போதும் தனது வரை படத்தில் அருணாசலப்பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என்று காட்டி வருகிறது. இதை இந்தியா பலமுறை மறுத்தபோதும், ஆக்ரமிப்பு செய்து நெருக்கடி கொடுக்கிறது.
தற்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே புகைச்சல் அதிகரித்து வருகிறது. எந்த சந்தர்ப்பத்திலும் சீனாவை இந்தியா நம்பக் கூடாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இதை விரும்பாமல் இந்தியாவுக்கு சீனா நெருக்கடி கொடுத்து வருகிறது. உலக அரங்கில் சீனா ஒதுக்கப்பட்டு வருவதும், சீனாவை எரிச்சல்படுத்தி உள்ளது.