ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் 2007ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தேறியது.
ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரத்தில் மக்கள் கூடியிருந்த வேளையில் நடைபெற்ற பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தொடங்கிய போலீசார் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணையை ஒப்படைத்தது. அதன் பின்னர், வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்து அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்தா, பவேஷ் பட்டேல் உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடப்பட்டு வந்த நான்கு பேரில் மூன்றுபேர் தலைமறைவாக இருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக ஜெய்ப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2011ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதில் 149 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கில் கடந்த மார்ச் 8ம் தேதி பட்டேல், குப்தா மற்றும் ஜோஷி ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், மற்றவர்களை விடுதலை செய்தது. அதில் ஜோஷியும், தேவேந்திர குப்தாவும் ஆர்.எஸ்.எஸ்சில் வேலை பார்த்தவர்கள். இதில் ஜோஷி ஏற்கனவே இறந்துவிட்டார்.
இந்நிலையில், பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கு தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. பவேஷ் பட்டேலுக்கு 10 ஆயிரம் ரூபாயும் குப்தாவிற்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.