உத்தரகாண்ட்: சுதந்திர தின விழாவுக்கு டிமிக்கு கொடுத்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
நாட்டின் 71வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு.
டேராடூன்: சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்ட் அரசு. இது தேசிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் 71வது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் சுதந்திரதின விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது.
அந்த விழாவை, உத்தரகாண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் 87 பேரில் 54 பேர் புறக்கணித்துள்ளனர். இதனை அறிந்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அதிர்ச்சியானார். இதுகுறித்து அதிகாரிகள் வட்டத்தில் அவர் விசாரித்தார்.
இதனையடுத்து முதல்வர் பங்கேற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளாமல், விழாவைத் தவிர்த்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு உத்தரகாண்ட் மாநில அரசு நோட்டீஸ் விடுத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில், இவ்வளவு ஐஏஎஸ் அதிகாரிகள் மொத்தமாக சுதந்திர தினவிழாவுக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்தது இந்த முறைதான் என்கிறார்கள் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலக அதிகாரிகள்.
சுதந்திர தினத்தை புறக்கணித்த அதிகாரிகளில், முதன்மை செயலாளர், கூடுதல் செயலாளர் உள்பட பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.