பாஜக கூட்டணியில் இணைகிறதா ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்? 3 அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு
அதிமுகவின் இரு அணிகளும் தேசிய ஜனநாயக கூட்டணில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: அதிமுகவின் இரு அணிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகரித்ததால் தனியாக செயல்பட தொடங்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தது.
ஆனால் கட்சியும் ஆட்சியும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதையடுத்து சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கு ஆபத்து என கூறிய எடப்பாடி அணியினர், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை கட்சியிலிருந்தது ஓதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை குழு கலைப்பு
இதையடுத்து இரு அணிகளும் விரைவில் இணையும் என கூறி பேச்சுவார்த்தைக்கானன குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனைகளை ஈபிஎஸ் அணியினர் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில்..
இந்நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் கூறப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய உள்ளதாக நியூஸ் எக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் இடம்
மேலும் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 3 இடங்களை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரு அணிகள் தரப்பில் இருந்தும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
தென்னிந்தியாவில் காவியை விரிவுபடுத்த பாஜக இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.