தவறு செய்யலைன்னா சிபிஐ விசாரணைக்கு ஆஜராகமாட்டீர்களா? கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி
டெல்லி: தவறே செய்யவில்லை என கூறி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பீர்களா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரால லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பது என்பது மிக மென்மையாக நடவடிக்கை என சுட்டிக்காட்டினார்.
கோரிக்கை
அப்போது கார்த்தி தரப்பு வழக்கறிஞரிடம், நீங்கள் தவறு செய்யவில்லை என கூறி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பீர்களா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கார்த்தியின் வழக்கறிஞர், இன்று கூட சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராக நாங்கள் தயார். ஆனால் பாதுகாப்பு தேவை. வழக்கறிஞரை உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
தலையீடு கூடாது
இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், கார்த்தி விசாரணைக்கு ஆஜராகும்போது வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதி அளித்தது. அதேநேரத்தில் விசாரணையில் தலையிட கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை பழிவாங்க
மேலும், அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியின் பெயரால் தந்தை ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கின்றனர். இதற்காக தம்மை துன்புறுத்துகின்றனர் என்றும் கார்த்தி சிதம்பரத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
நிராகரித்த உச்சநீதிமன்றம்
அத்துடன் முக்கிய அரசியல்வாதிகளின் உறவினர்களை குறிவைப்பது இப்போது பேஷனாகிவிட்டது எனவும் கார்த்தியின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ இந்த வாதத்தை அனுமதிக்கவில்லை.