தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதா- மத்திய அரசு ஒப்புதல்! ஜனாதிபதிக்கு அனுப்புகிறது!!
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பி வைக்கிறது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். தமிழினத்தின் இந்த உரிமை மீட்புக்காக பல லட்சம் பேர் திரண்டு அறவழிப் போர் நடத்தினர்.

இப்புரட்சியின் விளைவாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. பின்னர் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றும் வகையில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு சட்ட அமைச்சகம், கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் தெரிவித்திருந்தன.
இதையடுத்து உள்துறை அமைச்சகமும் இன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்தது. தற்போது இந்த மசோதாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications