ரூபாய் நோட்டு விவரத்தை முன்பே கசியவிட்ட மோடி- 37% கமிஷனுக்கு மாற்றும் அமித்ஷா ஆபீஸ் - பகீர் புகார்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்னரே தமக்கு நெருக்கமானவர்களுக்கு இதை கசியவிட்டார் மோடி என புதிய புகார் எழுந்துள்ளது.
அகமதாபாத்: ரூபாய் நோட்டு செல்லாது விவரத்தை முன்கூட்டியே மோடி தமது நெருக்கமானவர்களுக்கு கசியவிட்டதாகவும் அமித்ஷாவின் அலுவலகம் 37%கமிஷனுக்கு கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. யாதின் ஓஸ் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் யாதின் ஓஸ். தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு யாதின் ஓஸ் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நவ.8 . 2016 அன்று ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற உங்களின் அறிவிப்பை கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களது இந்த துணிவு மிக்க வரலாற்று செயலை மிகவும் பாராட்டினேன். ஆனால் அந்த மகிழ்ச்சியான தருணம் சிறிது நேரத்தில் முடிந்துவிட்டது.
முன்னர் நான் உங்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அதைவைத்து நான் யோசித்த போது, 50% கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நெருக்கமான தொழில் அதிபர்களுக்கு இது முன்னதாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைத்தேன். இது குறித்து நடத்திய விசாரணையில் இந்த அறிவிப்பின் பின்னால் மக்களை முட்டாள்கள் ஆக்கும் நோக்கம் உள்ளதை அறிந்து அதிர்ந்தேன்.
நவம்பர் 8-ந் தேதி முதல் தற்போது வரை அமித்ஷாவும் அவரது சகாக்களும் கருப்பு பணத்தை கமிஷனுக்கு வெள்ளையாக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். இதற்கான வலுவான வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் வெளியிட தயாராகவும் இருக்கிறேன்.
அதாவது ரூ1 கோடி கருப்புப் பணத்துக்கு 37% கமிஷன் பெறுகிறது அமித்ஷா அலுவலகம். நாள்தோறும் இரவும் பகலுமாக அமித்ஷா அலுவலகம், வீடுகளில் நீண்ட வரிசைகளில் கருப்பு பண பதுக்கல்காரர்கள் நிற்கின்றனர்.
என்னிடம் உள்ள வீடியோ பதிவை பத்திரிகையாளர்களிடம் முதலில் கான்பிக்கிறேன். பின்னர் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்... அதன் உண்மைத்தன்மையை நீங்கள் சரிபார்க்கலாம்.
இவ்வாறு யாதின் ஓஸ் கூறியுள்ளார்.