ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வந்தது டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு!
எய்ம்ஸ் மருத்துவர் கில்நானி தலைமையில் 4 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வந்தடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் கில்நானி தலைமையில் 4 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வந்தடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிப்பட்டன.
இதனிடையே, ரிச்சர்ட் ஆலோசனையின்படி இன்று திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பிறகு முதல்வருக்கு இதயநாளத்தில் சிறு அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை ஆற்றும் எதிர்வினையைப் பொறுத்து 24 மணி நேரம் கண்காணிப்புக்குப் பிறகு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், தமிழக அரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
அப்பல்லோ மருத்துவமனை கேட்டபடியே கில்நானி, திரிகா, நரங், தல்வார் ஆகியோர் அடங்கிய குழு சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.