கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீட்டில் ரெய்டு மட்டுமே, பணம் பறிமுதல் செய்யவில்லை.. வருமான வரித்துறை
கர்நாடகா அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் நடைபெற்ற வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூர்: கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி கைப்பற்றியதாக கூறும் தகவல் தவறானது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் வரும் 8-ஆம் தேதி ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 கோடி பேரம் பேசப்பட்டது. இதனால் பாஜகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தாவிவிடலாம் என்ற அச்சத்தின்பேரில் 44 எம்எல்ஏக்கள் பெங்களுரூவில் உள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர் ரிசார்டிலும், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் அமைச்சர் சிவகுமாரின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து விடுதியில் இருந்த சிவகுமாரை விசாரணைக்காக அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் ரூ.11 கோடி பணத்தை ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிவகுமாரின் வீட்டில் பணம் ஏதும் பறிமுதல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரூ.11 கோடி வரை கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.