ஜெ. வழக்கில் தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு: அன்பழகன் வக்கீல்
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள கணித பிழைகளை திருத்தி மீண்டும் வெளியிட முடியுமே தவிர, தீர்ப்பை மாற்ற முடியாது என்று அன்பழகன் தரப்பில் வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 362ன்கீழ், ஹைகோர்ட் தனது தீர்ப்பிலுள்ள கணக்கியல் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். அப்படி, கணக்கீட்டு தவறு திருத்தப்பட்டாலும், தீர்ப்பு அப்படியேத்தான் தொடரும். குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டாலும், அல்லது தண்டனைக்கு உட்பட்டாலும், அந்த தீர்ப்பை வழங்கிய பிறகு, அதை மாற்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.
சுப்ரீம் கோர்ட்
இனிமேல், தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கர்நாடகாவும், குற்றம்சாட்டப்பட்ட தரப்பும், இனிமேல், சுப்ரீம் கோர்ட்டில்தான் மோதிக்கொள்ள முடியும். அதேநேரம், வழக்கில் சம்மந்தப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி, மற்றும் அன்பழகனும் உச்சநீதிமன்றம் செல்ல முடியும்.
மேல்முறையீடு
முன்பெல்லாம், சம்மந்தப்பட்ட மாநில அரசுதான், மேல்முறையீடு செய்ய முடியும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 372ல் திருத்தம் செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புள்ள யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்யலாம் என்ற உரிமை தரப்பட்டது.
சு.சுவாமி, அன்பழகன் தாக்கல் செய்யலாம்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தளவில், சுப்பிரமணியன் சுவாமி, முதன்முதலில் வழக்கை தொடுத்தவர் என்ற முறையிலும், அன்பழகன், இந்த வழக்கில் ஏற்கனவே சம்மந்தப்பட்டவர் என்ற முறையிலும், மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. ஏற்கனவே ஹைகோர்ட்டில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும், அன்பழகன் ஆகிய இரு தரப்புக்குமே, எழுத்துப்பூர்வ வாதம் செய்ய அனுமதி கிடைத்தது. எனவே, உச்சநீதிமன்றத்திலும், இவ்விரு தரப்புமே அப்பீல் செய்யலாம்.
குறுகிய அவகாசம்
பவானிசிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வெளியான பிறகு, எதிர்தரப்பு வாதம் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது. அதுவும் எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள், 236 சாட்சிகள் தொடர்புள்ள வழக்கில், வாதம் சமர்ப்பிக்க கிடைத்தது எங்களுக்கு ஒரு நாள்தான்.
முடிவெடுக்கவில்லை
நான், அன்பழகன் தரப்புக்காக வாதம் செய்தபோதிலும், மேல்முறையீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான், அதுகுறித்து கருத்து கூற முடியும். இவ்வாறு நாகேஷ் தெரிவித்தார்.