”ஹேமமாலினி கூடவே என் சின்னியும் பிழைத்திருப்பாள்” - கதறும் தந்தை; கண்டுகொள்ளாத பிரபலங்கள்!
ஜெய்ப்பூர்: ஹேமமாலினியுடன் கூடவே என் குழந்தையையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவளும் உயிர் பிழைத்திருப்பாள் என்று நடிகை ஹேமமாலினி கார் மோதிய விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் முகத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான ஹேமமாலினி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிக்கவில்லை என்ற புதிய சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் வலுவடைந்துள்ளது.
உத்திர பிரதேசத்தின் மதுரா லோக்சபா தொகுதி எம்.பி யாக இருக்கும் பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி தமிழகத்தை பூர்விகமாக. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், மதுராவிலிருந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நோக்கி தனக்கு சொந்தமான, மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்றார்.
காரில் அவரின் உதவியாளரும் இருந்தார்.காரை மதுராவைச் சேர்ந்த மகேஷ் சந்த் தாக்குர் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆக்ரா - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது.
காரில் இருந்த ஹனுமான் மகாஜன் என்பவரின் 4 வயது மகள் சின்னி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த காரில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதுபோல ஹேமமாலினியும் பலத்த காயமடைந்தார். அவரின் வலது கண் இமையில் பெரிய அளவில் வெட்டு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நேற்று இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. .இந்த விபத்து குறித்து, ஹேமமாலினியின் கார் டிரைவர் தாக்குர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஹேமமாலினியை மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, காயம்பட்ட மற்றவர்களை மற்றொரு சாதாரண மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், ஹேமமாலினியின் உடல்நலம் குறித்து விசாரித்து வரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கூட அவருடைய கார் மோதி சிதைந்து போன அச்சிறுகுழந்தையின் இறப்பிற்கு வருத்தம் கூடத் தெரிவிக்காத மாண்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விபத்து நடைபெற்றவுடன் ஹேமமாலினியை மட்டும் வேகமாக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்கள் கூடவே அந்த 4 வயது இளம் குறுத்தான குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு இட்டுச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அக்குழந்தையின் தந்தை கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் உருக்குவதாக அமைந்தது.
"பாட்டுக் கேட்டுக் கொண்டே வந்த என் சின்னி உயிருடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்.பி என்பதாலோ, பிரபலம் என்பதாலோ ஹேமமாலினி உயிர் பிழைத்து விட்டார். ஆனால், ஒன்றுமே அறியாத என் 4 வயதுக் குழந்தை இன்று உயிருடன் இல்லை. எனக்கு என் மகனை விட உயிரினும் மேலானவள் என் பெண்" என்று ஆழ்ந்த வலிகளுடன் தெரிவித்துள்ளார் அக்குழந்தையின் தந்தை.
ஏற்கனவே விபத்து ஏற்பட்டால் யாரும் வழக்குகளுக்கு பயப்படாமல் உதவலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த கொஞ்ச நாட்களுக்குள் ஆளும் பாஜக எம்.பியின் கார் மோதிய விபத்தில் பொதுமக்களில் ஒருவரின் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் ஹேமமாலினியின் உடல்நலம் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.
அவருக்கும் விபத்தால் காயம் ஏற்பட்டிருந்த போது சுய நினைவு இருந்த போதிலும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றி கண்டு கொள்ளாததும், ஹேமமாலினியை விபத்திலிருந்து காப்பாற்றியவர்களின் பாரபட்சமும்தான் ஒரு குழந்தையின் உயிருக்கே எமனாகியுள்ளது என்று சொல்வது மிகையாகாது.