ராகுல் மாட்டுக்கறி சாப்பிட்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம்:பா.ஜ.க. சாக்ஷி மகாராஜ் சர்ச்சை பேச்சு!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹரித்துவாரில் நேற்று செய்தியாளர்களிடம் பா.ஜ.க.வின் சர்ச்சை எம்.பி. சாக்ஷி மகாராஜ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டே கேதார்நாத் சென்றார்.. அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை.. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார்.
இந்த பேட்டியின் போது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியும் உடனிருந்தார்.
சாக்ஷி மகாராஜின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகாராஜ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே பேசி வருகிறார்.. இந்து பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; காந்தி கொலையாளிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது என்றெல்லாம் சர்ச்சைகளில் சிக்கிய அவர் தற்போது ராகுல் காந்தி கேதார்நாத் சென்றதற்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்..
இத்தகைய பேச்சுகளுக்காக சாக்ஷி மகாராஜ் மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.