பெங்களூர் எம்ஜி ரோட்டில் ஷாப்பிங் செய்தார் சசிகலா.. கர்நாடக முதல்வருக்கு காங். பிரமுகர் பரபர கடிதம்
பெங்களூர்: அதிமுக-அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரின் மையப்பகுதியிலுள்ள ஷாப்பிங் ஏரியாவான எம்ஜி சாலையில் ஷாப்பிங் சென்றதாகவும் அதை தான் பார்த்ததாகவும் குற்றம்சாட்டி கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் முத்து மாணிக்கம் என்பவர் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் முத்து மாணிக்கம் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சசிகலாவுக்கு சிறைக்குள் சலுகைகள் காட்டப்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியே செல்ல சசிகலாவுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது. அவரது அடையாளத்தை மறைத்துக் கொள்ள பர்தா அணிந்துகொள்ளவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயண ராவ், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து சசிகலாவுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இளவரசிக்கும் சலுகை காட்டப்பட்டுள்ளது. எம்ஜி ரோடு, ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் கமர்சியல் தெரு பகுதியில் ஷாப்பிங்கிற்கான கடைகள் அதிகம் என்பதால் அங்கெல்லாம் அவர் பர்தா அணிந்து சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாலைக்கு பிறகு சிறைத்துறை அதிகாரிகள் காரிலேயே இளவரசியும், சசிகலாவும் வெளியே வந்துள்ளனர். இதுகுறித்தெல்லாம் அதிகாரி ரூபா சுட்டிக் காட்ட முற்பட்டபோது அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சசிகலா மீதும் சத்யநாராயணராவ், கிருஷ்ணகுமார், அனிதா ஆகிய சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ரூபாவை மீண்டும் சிறை நிர்வாக பணியில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.