நீ அந்தப் பக்கம் போ.. நீ இந்தப் பக்கம் வா.. சுத்தி வளைங்கப்பா.. எய்ம்ஸில் குரங்கு வேட்டை!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களை கடித்து அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிக்க 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுமக்களை கடித்து அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள், நோயாளிகள் உள்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 15 தினங்களாக குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மருத்துவமனைக்குள் யாரும் நிம்மதியாக சென்று வரமுடியவில்லை என்பதோடு, கேண்டீனிலும் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை என்று புலம்புகின்றனர் மக்கள்.
சுதந்திரமாக சுற்றித்திரியும் இந்தக் குரங்குகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 பேரையாவது கடித்து வைத்து விடுகிறதாம்.
120 பேருக்கு கடி
இதே போன்று கடந்த 15 நாளில் மருத்துவர்கள், நர்சுகள், நோயாளிகளின் உறவினர்கள் என்று 120 பேரின் சதைகளை பதம் பார்த்துள்ளது. நோயாளிகளை பார்க்க வருபவர்கள் குரங்குக் கடிக்கு வைத்தியம் பார்த்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தெரு நாய்கள் தொல்லை வேறு
இதே போன்று மருத்துவமனைக்குள் தெரு நாய்களின் தொல்லையும் தாங்க முடியவில்லையாம். எனவே விலங்குகளை பிடிப்பதற்காக 17 பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இவர்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஊற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு கடிதம்
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் செல்லும் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் குரங்கு, நாய்களைக் கண்டு அச்சத்துடனே நடமாடி வருகின்றனர். எனவே இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அனைவரையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேனகா காந்தி தலையிட கோரிக்கை
இதே போன்று மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் விலங்குகளை பிடிப்பது குற்றம் என்று சட்டம் சொல்வதால் நடைமுறை சிக்கல்களை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.