அடுத்து பிரதமர்தான்.... மோடிக்கு செக் வைக்கும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் 'ரசிகர்கள்'
உ.பி. முதல்வராகிவிட்ட சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத் ரசிகர்கள் இப்போதே அடுத்த பிரதமர் என்கிற கனவில் மிதக்க தொடங்கிவிட்டனர்.
லக்னோ: நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகிவிட்டார் சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்.. ஆனால் அவரது சாமியார் ரசிகர்களோ இன்றைக்கு யோகி ஆதித்யநாத் முதல்வர்.. நாளைக்கு நாட்டின் பிரதமர் என கனவில் மிதந்து வருகின்றனர்.
5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்... உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மடாதிபதி.. 44 வயதாகும் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளால் இந்துத்துவாவாதிகளில் கொண்டாடப்படுகிறவர். இவருக்குத்தான் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் பதவி என்கிற மகுடத்தை சூட்டியுள்ளது பாஜக.
விஷம பிரசாரம்
இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம பிரசாரத்தை மேற்கொள்வதை மட்டுமே முழுநேர பணியாக செய்பவர்... இப்படி பேசியே இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தியவர்... இதற்காகத்தான் இப்போது முதல்வர் ஆசனத்தில் அமரவைக்கப்பட்டுள்ளார் யோகி ஆதித்யநாத்.
திருப்தி இல்லை
ஆனாலும் இந்த சர்ச்சை சாமியாரின் அடிப்பொடிகளுக்கு திருப்தி இல்லையாம்... 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்துவதில் யோகி ஆதித்யநாத்தின் பங்கு பிரதானமாக இருக்குமாம்..
மோடியை விட வலிமையாக..
2024 லோக்சபா தேர்தலின் போது மோடியை விட அவர் வலிமையான சக்தியாக வளர்ந்துவிடுவார் என்கின்றனர். யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஸ்ஸும் கூட, நாட்டின் மிக முக்கியமான மாநிலத்தின் முதல்வராகிவிட்டார்... விரைவில் பிரதமர் நாற்காலியில் மகன் அமர்ந்துவிடுவார் என்கிறார் நம்பிக்கையோடு.
மோடி விரும்பமாட்டார்...
யோகி ஆதித்யநாத் அண்ட்கோவின் இந்த நம்பிக்கை முழக்கங்கள், மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர விரும்பும் நரேந்திர மோடிக்கு நிச்சயம் நெருடலைத்தான் தரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என ஜாம்பவான்களை வீழ்த்திவிட்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்த மோடியும் கூட நிச்சயம் இந்த முழக்கங்களை ரசிக்கப் போவதில்லைதான்!