கத்தார் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது ஏன்? சவுதி அரேபியா விளக்கம்!
தங்கள் வான்வெளியில் கத்தார் விமானங்கள் பறக்க ஏன் தடை விதிக்கப்பட்டது என சவுதி அரேபியா விளக்கமளித்துள்ளது.
துபாய்: சவுதி அரேபியா வான்வெளித்தளத்தில் கத்தார் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தடைவிதிக்கப்பட்டது என சவுதி அரேபியா அரசு விளக்கமளித்துள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதகாவும், ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பஹ்ரைன், யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளன.
மேலும் கத்தாருடனான ராஜாங்க ரீதியிலான உறவைத் முறித்துக் கொள்வதாகவும் அந்த நாடுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடன் கடல் மறும் வான்வழி போக்குவரத்தையும் அந்த நாடுகள் துண்டித்துக்கொண்டன.
கத்தாருடனான கதவுகள் மூடல்
தூதர்களை திரும்ப பெற்ற அந்நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் கத்தார் நாட்டு மக்கள் வெளியே வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தன. இதைத்தொடர்ந்து கத்தாருடனான சாலை வழிப் போக்குவரத்தையும் அந்நாடுகள் மூடின.
கத்தார் விமானங்களுக்கு தடை
சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான வான் வழிப்போக்குவரத்தை துண்டித்தன. மேலும் சவுதி அரேபியா தங்கள் நாட்டின் வான் வெளித்தளத்தில் கத்தார் விமானங்கள் பறக்கக்கூடாது என்றும் கூறியது.
ஏன் தடைவிதிக்கப்பட்டது?
இதேபோல் பஹ்ரைன், யுஏஇ உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தடைவிதித்தது. இந்நிலையில் தங்கள் நாட்டின் வான்வெளித் தளத்தின் மீது கத்தார் விமானங்கள் பறக்க ஏன் தடைவிதிக்கப்பட்டது என சவுதி அரேபியா விளக்கமளித்துள்ளது.
மக்களின் பாதுகாப்புக்காக
இதுதொடர்பாக சவுதி அரேபியா விமான போக்குவரத்துத்துறை கூறியிருப்பதாவது, தங்கள் நாட்டுக்கும் தங்கள் நாட்டின் குடிமக்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் கத்தாருக்கான வான்வெளித்தளம் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
18 முனையங்கள் மூடல்
பஹ்ரைன், எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தக்காரணத்தையே தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் சவுதி அரேபியா மற்றும் அமீரகத்தில் தனது 18 முனையங்களை மூடியுள்ளது.