மும்பை: விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு, டெஸ்ட் கிரிக்கெட் அணி துணை கேப்டன் விராட் கோஹ்லி பெயரையும், அர்ஜுனா விருதுக்கு, அஜிங்ய ரஹானே பெயரையும், இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
விராட் கோஹ்லி 2013ம் ஆண்டில் அர்ஜுனா விருது பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் முடிந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக ஆடியதற்காக, பிசிசிஐ அவருக்கு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு துறை அமைச்சகம் இதில் இறுதி முடிவை எடுக்கும்.
2012ம் ஆண்டு, கேல் ரத்னா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்தபோதும், லண்டன் ஒலிம்பிக்கில் கலக்கிய துப்பாக்கி சுடும் வீரர் விஜய் குமார் மற்றும் குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத் ஆகியோருக்கு அந்த விருதுகளை அமைச்சகம் வழங்கி கவுரவித்தது. ஆனால் மறு ஆண்டில், ராகுல் டிராவிட்டிற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
உலக கோப்பை டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோஹ்லி மொத்தம் 273 ரன்களை 146.77 என்ற ஸ்டிரைக் ரேட் உதவியோடு குதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரஹானே தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது பிசிசிஐ. ஆனால், அவருக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு, அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.