அரசியல் பிரவேசம்... திருச்சியை நோக்கித் திரண்ட ரஜினி ரசிகர்கள்!
ரஜினி அரசியலுக்கு வரக்கோரி திருச்சியில், தமிழருவி மணியன் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். இதனால் திருச்சி நகரம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி: திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்துள்ளதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசுகிறார். இதில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
இதனால் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களுடன் ரஜினிகாந்த், தமிழருவி மணியன் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மதுவற்ற மாநிலம், உண்மையாக இருப்போம், ஊழலற்ற தமிழகம் அமைப்போம் என வாசகங்கள் கொண்ட பேனர்கள் மேடை முகப்பில் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் திரண்டு வருவதால் உளவுத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.