ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடிதான் முதல் கையெழுத்து!- கருணாநிதி
திருவாரூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வகையில் முதல் கையெழுத்து போடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தனது சொந்த தொகுதியான திருவாரூரில் 2-ம் கட்ட பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினார் கருணாநிதி.
அவர் பேசுகையில், "திருவாரூர் தொகுதியில் கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். என்னை வெற்றி பெற வைத்தீர்கள். மண்ணின் மைந்தராக, உங்கள் வீட்டு பிள்ளையாக மீண்டும் இங்கு போட்டியிடுகிறேன். உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன். மாற்று அரசு உருவாக உங்களது அன்பான வாக்குகளை எனக்கு அளிக்க வேண்டும்.
விஞ்ஞான ரீதியில் தேரை ஓட வைத்தேன்
திருவாரூரில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைத்து தர வேண்டும். எனது முயற்சியில் தான் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு அகில இந்திய அளவில் மாணவர்கள் படித்து வருகின்றார்கள். அதேபோல ரூ.100 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஓடாமல் இருந்த ஆழித்தேரை விஞ்ஞான ரீதியில் ஓட வைத்தேன்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிறு, குறு விவசாயிகள் என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கிறேன். இந்த அறிவிப்பை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்," என்றார்.
முதல் கையெழுத்து
பின்னர் அம்மையப்பன் என்ற பகுதியில் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் அறிந்தேன். இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டால் விவசாயிகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதே முதல் கையெழுத்தாக இருக்கும்," என்றார்.