லஞ்சம், ஊழல்களால் வெறுப்பு.. ஆந்திராவுக்கு இடம் பெயரும் தமிழக தொழில் நிறுவனங்கள்!
சென்னை: தமிழகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல்களால் ஆந்திராவை நோக்கி தொழில்கள் இடம் பெயரத் தொடங்கியுள்ளதாக அபாய சங்கு ஊதியுள்ளது ஒரு முன்னணி வணிக ஆங்கில பத்திரிகை. ஆந்திராவில் வேலைகள் வேகமாக முடிவதையும், அண்டை மாநிலமான தமிழகம் அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் செய்தியாக வெளியிட்டுள்ளது அப்பத்திரிகை.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: புதிதாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முழு வீச்சில் முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பெரிய துறைகள் மட்டுமின்றி, அனைத்து வகை துறை முதலீடுகளையும் ஈர்ப்பதற்கு நாயுடு முழு அளவில் முயன்று வருகிறார்.
ஆந்திரா நகர்வு
இதன்காரணமாக, தமிழகத்திலுள்ள பல துறைகளின் முதலீட்டாளர்களும், தங்களது புதிய விரிவாக்க திட்டங்களை ஆந்திராவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த துறைதான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி எல்லா துறைகளின் அதிபர்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர். இதற்கு காரணம், திறமையான மற்றும் உடனடியாக தீர்வு அளிக்க கூடிய அரசு ஆந்திராவில் இருப்பதுதான். பெயர் தெரிவிக்க விரும்பாமல் கருத்து கூறிய பல துறை தொழிலதிபர்கள் இதை அந்த பத்திரிகையிடம் கூறியுள்ளனர்.
மனவருத்தம்
"2012ம் ஆண்டில், தமிழக முதல்வர் 'விஷன் 2023' என்ற பெயரில், தொழில்மேம்பாட்டுக்காக ஒரு டாக்குமென்ட் வெளியிட்டார். அதன் அம்சங்கள் வரவேற்கதக்கவையாக இருந்தன. மாநிலம் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று நம்பினோம். ஆனால், தொழிலதிபர்கள் தற்போது, மன வருத்தத்தில் உள்ளோம்" என்று கூறுகிறார், சோலார் பேனல் நிறுவன தொழிலதிபர் ஒருவர்.
20 சதவீதம் லஞ்சம்
சோலார் அதிபர் மேலும் கூறுகையில், "1 கோடி செலவில் நான் சிறிய உற்பத்தி பிரிவு ஒன்றை தொடங்கினேன். உற்பத்தியை தொடங்க போகும் நேரத்தில், குறிப்பிட்ட ஒரு துறையில் இருந்து எனக்கு நோட்டீஸ் வந்தது. 10 நாட்களுக்குள் குறிப்பிட்ட ஆவணங்களை தராவிட்டால், உற்பத்தி பிரிவு சீல் வைக்கப்படும் என்று நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. உடனடியாக, சம்மந்தப்பட்ட அலுவலகம் சென்று, எதற்காக இந்த நோட்டீஸ் என்று கேட்டபோது, அந்த துறை அமைச்சரை சென்று பார்க்குமாறு உத்தரவிட்டனர். அமைச்சரை பார்த்தபோது, ஆலையை தொடங்க 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அவரிடம் பேரம் பேசி ரூ.20 லட்சம் கொடுத்து, ஆலையை திறந்தேன். 1 கோடி முதலீட்டுக்கு லஞ்சமே 20 லட்சம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை" என்று கூறினார்.
லஞ்சம் படுத்தும்பாடு
லெதர் தொழிலை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், "மாதம்தோறும் எனது தொழிற்சாலையில் இருந்து இன்ஸ்பெக்டர் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுச் செல்வார். திடீரென ரூ.40 ஆயிரம் கேட்டார். நான் எதற்காக அவ்வளவு கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, என்னை டிரான்ஸ்பர் செய்துவிட்டனர். டிரான்ஸ்பரை வாபஸ் வாங்க அமைச்சர், பணம் கேட்கிறார். எனவே, நானும் எனது மாமூலை உயர்த்தி கேட்கிறேன் என்று கூறினார்" இவ்வாறு அந்த தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் லஞ்சம் இல்லை
மேலும், அந்த லெதர் பிசினஸ்மேன் கூறுகையில், "தமிழகத்தில் இப்படி லஞ்சம் கொடுத்துக் கொண்டிருக்கும் எனக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆபீசில் இருந்து போன் வந்தது. பல்வேறு சலுகைகளை தருவதாக அவர்கள் கூறினர். எல்லாவற்றையும்விட, அனைத்து அனுமதிகளையும் 3 வாரங்களில் முடித்து தருவதாக கூறியது மகிழ்ச்சியளித்தது. மேலும், லஞ்சம் எதுவும் நீங்கள் கொடுக்க அவசியம் இல்லை என்ற வார்த்தையை அவர்கள் அழுத்தி சொன்னார்கள்" என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சரியான அடி
ஆந்திர அரசு, தமிழக எல்லையான கோதபட்டிணம் பகுதியில், லெதர் பார்க் அமைக்க உள்ளது. இதற்காக தமிழக தொழிலதிபர்களை அமாநில அரசு ஈர்க்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் மொத்த லெதர் ஏற்றுமதியில் தமிழகத்தின்பங்கு 38 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டில் தமிழக லெதர் ஏற்றுமதி மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். எனவே, முன்னணியிலுள்ள தமிழகத்தில் இருந்து லெதர் ஆலைகளை தங்கள் பக்கம் ஈர்க்க சரியாக ஸ்கெட்ச் போட்டுவிட்டது ஆந்திரா.
முதல்வர் கவனிக்கனும்
இதுகுறித்து தென்இந்திய தொழில் வர்த்தக சபை, செயலாளர் ராகவன் கூறுகையில், தமிழ்நாட்டில் தொழில் வாய்ப்புகள் உள்ளன. நிலையான ஒரு அரசும் உள்ளது. ஆனால் முதலீட்டாளர்களை காப்பாற்ற முதல்வர் அலுவலகத்தில், தனி பிரிவு இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், முதல்வர் கவனத்திற்கு சிக்கல்களை கொண்டு செல்ல எளிதாக இருக்கும் என்றார்.
ரபிபெர்னார்ட்
அதிமுக செய்தித்தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான, ரபி பெர்னார்ட் கூறுகையில், "ஆந்திரா அறிவித்துள்ள கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளால் தொழில்முனைவோர் ஈர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு மீது நம்பிக்கை
முந்தைய ஆட்சி காலத்தில், சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்தை, தகவல் தொழில்நுட்ப துறையில், பெங்களூருக்கு அடுத்ததாக 2வது இடத்துக்கு கொண்டு வந்ததையும், அந்த நகரத்தின் கட்டமைப்பை மாற்றி நவீனமாக்கியதையும் ஒப்பிட்டு பார்த்து, நாயுடுவின் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கின்றனர் தொழிலதிபர்கள். இப்போதும், திருப்பதி, காக்கிநாடா, விஜயவாடா மற்றும் அனந்த்பூர் ஆகிய நகரங்களில் ஐடி பூங்காக்கள் அமைக்கவும், விசாகபட்டிணத்தில் பெரிய அளவில் ஐடி நிறுவனங்களை ஈர்க்கவும் நாயுடு திட்டமிட்டுள்ளார்.
21 நாளில் சகல வசதிகள்
"ஆந்திரா ஒரு புதிய மாநிலம், எங்களிடம் தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர் உள்ளார். ஹைதராபாத் இன்று இந்த நிலைக்கு வர, தற்போதைய ஆந்திர முதல்வர்தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் தொழில்தொடங்க வருவோருக்கு நண்பர்களாக உள்ளோம். அனைத்து வகை அனுமதியையும் 21 நாட்களுக்குள் முடித்துக்கொடுக்கிறோம். முக்கியமான துறைகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கிறோம். உதாரணத்துக்கு ஆட்டோமொபைல் தொழில்" என்று கூறுகிறார் ஆந்திர தொழில்துறை செயலாளர் ஷம்செர் சிங் ராவத்.
கர்நாடகாவும் முன்னேற்றம்
அதேநேரம் தமிழகத்தில், அனுமதி பெற அதிக காலம் விரையமாகிறது என்கின்றனர் தொழிலதிபர்கள். குறுந்தொழிலதிபர்கள் சிலர் கூறுகையில், "கர்நாடகாவை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அரை நாளில், ஒரு புராப்பர்டியை ரிஜிஜ்டர் செய்துவிட முடியும். மின்தொழில்நுட்ப அரசாட்சி இதற்கு முக்கிய காரணம். ஆனால், தமிழகத்தில், 10 நாளை கடந்தும் இழுத்துக் கொண்டிருக்கும். தமிழகம் ஒரு நல்ல நிலையில் இல்லை. இதற்கு யார் காரணம் என்று சொல்ல முடியவில்லை" என்று தெரிவித்தனர்.
என்ன செய்வது?
"தமிழகத்தில் 4 பெரிய துறைமுகங்கள் மற்றும் 8 சிறிய துறைமுகங்கள் உள்ளன. 3 அல்லது நான்கு சர்வதேச விமான நிலையங்களுடன் தமிழகம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி கட்டத்தில் கோட்டைவிட்டுவிடுகிறது. உதாரணத்துக்கு, சென்னை துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை தமிழக அரசு பாதியில் நிறுத்தி செயல்படுத்த மறுக்கிறது. இந்த திட்டம் வந்திருந்தால் துறைமுகத்தில் இருந்து சென்னையின் புறவழிச்சாலைக்கு எவ்வளவு எளிதாக சரக்குகள் கொண்டுவர முடியும். தொழில்கள் எப்படியெல்லாம் பெருகியிருக்கும்.." என்று சில தொழிலதிபர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.