தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கலாமா?... சபாநாயகருடன் முதல்வர், துணை முதல்வர் தொடர் ஆலோசனை!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்தது குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் தனபால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில் வெற்றிவேல் எம்எல்ஏ, வழக்கறிஞர் உதவியுடன் 18 பேர் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் கேட்டிருக்கும் ஆவணங்களை அளித்தால் எம்எல்ஏக்களை கர்நாடக போலீசாரின் உதவியுடன் சபாநாயகர் முன்பு ஆஜர்படுத்தத் தயார் என்றும் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை வரை அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போதே 18 எம்எல்ஏக்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை தொடங்கிவிட்டதான அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யலாமா, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் சபாநாயர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்றும் பிற்பகல் 1.40 மணி முதல் சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும் பங்கேற்றுள்ளார்.