தமிழக அரசு எங்களை அரை நிர்வாணமாக்கி விட்டது - அய்யாக்கண்ணு
தமிழக அரசு விவசாயிகளை அடிமை போல நடத்துவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகளை தமிழக அரசு அரைநிர்வாணப்படுத்தி விட்டதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அய்யாக்கண்ணு, வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.
வாழ்வா சாவா?
விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு தற்போது வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தர வேண்டும்.
அடிமைகள்
தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகள் போல நடத்துகிறார்கள். ஹைட்ரோகார்பனை எடுத்து எங்களை கொலை செய்ய பார்க்கிறார்கள்.
கண்டு கொள்ளாத அரசு
விவசாயிகள் 4ஆம் தர குடிமக்களாக வாழ கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டெல்லியில் நாங்கள் 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் ஆளும் மத்திய அரசோ எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.
நிர்வாணமாக ஓட விட வேண்டாம்
டெல்லியில் நிர்வாணமாக ஓடிவிட்டோம், இங்கேயும் நிர்வாணமாக ஓட விட வேண்டாம். இனி வாழ்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள்.
தொடர் போராட்டம்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற இன்று முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 32 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் தொடர் போராட்டமாக நடைபெறுகிறது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், வெற்றி கிடைக்கும் வரையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார் அய்யாக்கண்ணு.