நெடுவாசலை விழுங்க துடிக்கும் கர்நாடக பாஜக எம்.பி குடும்ப நிறுவனம்.. பரபர தகவல்கள்! #saveneduvasal
நெடுவாசலை சுடுகாடாக்கத் துடிக்கும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம் கர்நாடக பாஜக எம்.பியின் குடும்ப நிறுவனமாகும்.
சென்னை: நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தி அதை சுடுகாடாக்கத் துடித்து வரும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்தது. பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனம்தான் இது.
நெடுவாசல் போர்க்களமாகியுள்ளது. மீண்டும் ஒரு மக்கள் போராட்டத்தை தமிழகம் கண்டு வருகிறது. நெடுவாசல் விவசாயிகளுக்காக தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாடு கடந்து பல்வறு நாடுகளிலும் கூட உரத்த குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தும் உரிமம் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பின்னணி குறித்து தற்போது பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக ஜி.எம்.
கர்நாடக அரசியல் வட்டாரத்தில், ஜி.எம் என்ற பெயர் ரொம்பப் பாப்புலர். அந்தப் பெருமைக்குரியவர் ஜி. மல்லிகார்ஜுனப்பா. மறைந்த மல்லிகார்ஜுனப்பா அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். பின்னர் பாஜக உதயமானபோது அதில் இணைந்து செயல்பட்டவர். ஜி.எம். என்று செல்லமாக அழைக்கப்படும் மல்லிகார்ஜுனப்பா சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
2 முறை எம்.பி.
மல்லிகார்ஜுனப்பா பாஜக சார்பில் தாவணகரே தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு 2 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜி.எம். குரூப் நிறுவனங்களை உருவாக்கியவர் இவர்தான். கல்வி, விவசாயம், சர்க்கரை, மின்சாரம், வங்கித்துறை, நிதி, ஏற்றுமதி இறக்குமதி, வர்த்தகம் என இவர் தொடாத தொழில்களே இல்லை.
"பாக்கு ராஜா"
பாக்கு ராஜா என்று இவரது பெயர் கர்நாடகத்தில் பிரபலம். காரணம் பாக்கு ஏற்றுமதியில் அந்த அளவுக்கு இவர் பிரசித்தமாவார். பாக்கு தொழிலில்தான் ஆரம்பத்தில் இவர் ஈடுபட்டு வந்தார். கடைசி வரை அதை தொடர்ந்தும் வந்தார். கர்நாடகத்தின் சக்தி வாய்ந்த சமூகமான லிங்காயத்துக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் மல்லிகார்ஜுனப்பா.
3 மகன்கள்
மல்லிகார்ஜூனப்பாவுக்கு மொத்தம் 3 மகன்கள், 4 மகள்கள், 14 பேரப் பிள்ளைகள். மூன்று மகன்களில் மூத்தவர் பெயர் ஜி.எம். சித்தேஸ்வரா. 2வது மகன் பெயர் ஜி.எம். பிரசன்ன குமார், 3வது மகன் பெயர் ஜி.எம். லிங்கராஜு. இதில் சித்தேஸ்வராவும், லிங்கராஜுவும்தான் தற்போது நமது கதையின் முக்கிய நாயகர்கள்.
பாஜக எம்.பி. சித்தேஸ்வரா
சித்தேஸ்வராதான் தற்போது தாவணகரே தொகுதி பாஜக எம்.பி. ஆவார். 3வது முறையாக அவர் தாவணகரே எம்.பியாக இருந்து வருகிறார். தீவிர எதியூரப்பா ஆதரவாளர். இவரது தம்பிகள் பிரசன்ன குமாரும், லிங்கராஜுவும் ஜிஎம். குரூப் நிறுவனங்களை பார்த்துக் கொள்கிறார்கள். அதேசமயம், சித்தேஸ்வராவும் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
லிங்கராஜுவின் ஜெம் லாபரெட்டரீஸ்
இதில் லிங்கராஜுதான் சர்ச்சைக்குரிய ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து வருகிறார். இது வேதிப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமாகும். இந்த நிறுவனம்தான் தற்போது நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை எடுத்து விற்பனை செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது.
பாஜக பின்புலம்
ஜெம் நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்தது என்பது மட்டுமே இதுநாள் வரை வெளியில் தெரிந்து வந்தது. ஆனால் அது பலமான பாஜக பின்னணியில் உள்ள நிறுவனம் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த சித்தேஸ்வரா மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரை பதவியிலிருந்து நீக்கி விட்டார் மோடி.
இதனால்தானா??
இப்படி ஆர்.எஸ்.எஸ். பாஜக தொடர்புகளை வலுவாக கொண்ட நிறுவனம் என்பதால்தான் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனத்திற்கு சில பாஜக தலைவர்கள் வக்காலத்து வாங்குகின்றனரா, திட்டத்திற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி என்று நக்கலாக கேட்கிறார்களா, தரையில் பதிக்காமல் ஆகாயத்திலா குழாய் பதிக்க முடியும் என்று எகத்தாளமாக பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.