காவிரிக்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டி என்ன பயன் கிடைக்கும்? சீறும் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டினால் பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டி என்ன செய்ய போகிறது? தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்கும்.
திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்காது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது தமிழக அரசின் பொறுப்பு மட்டுமே.
திமுகவும் காங்கிரஸும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் காரணத்துக்காகத்தான் என்பதை துணிச்சலாக சொல்கிறேன். காவிரி பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகையால் மத்திய அரசு சட்ட திட்டத்துக்கு உட்பட்டுதான் அணுக முடியும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.