மதுவிலக்கு, நெசவாளர்களுக்கு வீடு, 20 லி.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்- பாஜக தேர்தல் அறிக்கை
சென்னை: வீடில்லா நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மே16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக பாஜக தேர்தல் அறிக்கை இன்று சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாயத்தில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேர்தல் அறிக்கையை வெளியிட பொன். ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
தேர்தல் அறிக்கையை "தொலைநோக்கு ஆவணம்" என்ற பெயரில் வெளியிட்டது பாஜக. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
•பூரண மதுவிலக்கு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும்
•கரும்பில் இருந்து எத்தனால் எடுக்க அனுமதி அளிக்கப்படும்
•மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 16000 நிர்ணயம் செய்யப்படும்
• கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 அளிக்கப்படும்
•விவசாயிகள் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும்
•விவசாயக்கடன் ரத்து, மஞ்சள் நல வாரியம் அமைக்கப்படும்
•அரசாங்கமே மணல் விற்பனை செய்யும்
•புதிய ஜவுளிக்கொள்கை உருவாக்கப்படும்
•ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
•வீடில்லா நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்
•சூரிய ஒளி மின்சார தயாரிப்புக்கு 50 சதவிகித மானியம் தரப்படும்
•மின் தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் மின்சாரம் - பாஜக தேர்தல் அறிக்கை
•ஒற்றை சாளர முறையில் சிறு, குறு தொழில்கள் தொடங்க அனுமதி
•அடுத்த ஆண்டு முதல் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
•வெளிநாடுவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்கு சிறப்பு அமைப்பு
•அனைத்து பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் தவிர 3வது சிறப்பு மொழி படிக்க ஏற்பாடு
•இந்து கோவில்களை நிர்வகிக்க ஆன்றோர் சான்றோர் அடங்கிய குழு அமைக்கப்படும்
•லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும்
•கல்வி நிறுவனங்கள் நடத்த அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்படும்
•ஆதி திராவிடர் நலத்துறை பட்டியலினத்தவராக மாற்றப்படும்
•கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு - கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்
•பெண் குழந்தைகள் கல்விக்கு புதிய திட்டம் வகுக்கப்படும்
•ஆன்மீகச்சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
•ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்கள் 6 மாதத்தில் மீட்கப்படும்
•மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும்
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், எங்களுடைய தேர்தல் அறிக்கையை ஹீரோ என்று நாங்கள் கூற மாட்டோம் என்றார். கட்சித்தலைமையின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் தேர்தல் அறிக்கையை ஹீரோ என்று கூறுவார்கள் என்று தெரிவித்தார். ஆளும் அதிமுக அரசு தேர்தல் அறிக்கை வெளியிட அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.