தமிழக ஆளுநராக சுப்பிரமணியன் சுவாமி நியமனம்? மறுப்பு சொல்லாத பொன்.ராதாகிருஷ்ணன்
சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
நாகர்கோவில்: பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியை தமிழக ஆளுநராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், இக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: தமிழகத்துக்கு ஒரே ஒரு முதல்வர்தான் உள்ளார் என்பதால், தமிழ்நாட்டில் இரட்டை தலைமை ஆட்சி நடக்கிறது என்று சொல்ல முடியாது.
சசிகலாவுக்கு அதிமுக பதவி தர வேண்டுமா இல்லையா என்பது அக்கட்சி உள் விவகாரம். அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை.
மத்திய அரசு திட்டங்கள்
ஜெயலலிதா இறந்த பிறகுதான் மத்திய அரசின் திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூறுவது தவறானது. ஜெயலலிதா இருந்தபோதே இத்திட்டங்கள் குறித்து முறையான அனுமதி பெறப்பட்டு வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்கான அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
சேகர் ரெட்டி
சேகர் ரெட்டிக்கு இந்த பணமும், நகையும் எப்படி கிடைத்தது என்பது பற்றி மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பணம், நகை கிடைக்க இவருக்கு உதவியவர்கள் யாரும் தப்ப முடியாது. அவர்கள் யார் என கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுப்பிரமணியன் சுவாமி
தமிழகத்தின் ஆளுநராக சுப்பிரமணிய சாமி நியமிக்கப்படுவாரா? என்பது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். டிவிட்டரில் சில தினங்கள் முன்பு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து ஒன்றில், தமிழகத்தில் ஆளுநராக தனக்கு விருப்பம் இல்லை என்றும், அப்படி ஆக வேண்டுமெனில் மோடி அரசு பதவியேற்றதுமே அப்பதவிக்கு வந்திருப்பேன் என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காலியாக உள்ள பதவி
ரோசய்யா பதவிக் காலம் முடிவடைந்த பிறகு தமிழகத்திற்கு பிரத்யேக ஆளுநர் இன்னும் நியமிக்கப்படவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் கூட மகாராஷ்டிராவின் ஆளுநரான வித்யாசாகர் ராவ்தான் தமிழகத்திற்கும் பொறுப்பு ஆளுநராக தொடர்ந்தார், தொடர்கிறார். எனவே அந்த பதவிக்கு சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.