சென்னை வெள்ளத்தால் வீடின்றி வீதிகளில் உறங்கும் மக்கள்... குடியிருப்புகள் கேட்டு ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். முகாம்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வீதிகளில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் சாலையோரங்களில் படுத்து உறங்குவதால் பலவித இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். மழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த சைதாப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்தில் கொட்டிய மழையால், அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. அதிகப்படியான மழைப்பொழிவு மட்டுமின்றி, நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே, இதற்கு காரணம் என தெரியவந்தது.
அடையாறு, கூவம் ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காக தற்போது கணக்கெடுப்பு பணி நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் நகர்பகுதியை விட்டு புறநகர் பகுதிக்கு செல்ல மக்கள் மறுத்து வருகின்றனர்.

நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள்
நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நெருக்கடி, பொதுப்பணித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய ரகசிய கணக்கெடுப்பை, பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் நீர்வளத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கணக்கெடுப்புகள்
குடியிருப்பு கட்டடங்கள், குடிசைகள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் என, ஏரிகளில் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது பற்றி, தனித்தனியாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதே நேரத்தில் இது வெள்ள நிவாரண கணக்கெடுப்பு என்றும் கூறப்படுகிறது.

வீடுகளை இழந்தவர்கள்
சைதாப்பேட்டை, சின்னமலையிலுள்ள ஆரோக்கியமாத நகர் சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், பள்ளிகளிலும், சத்திரங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

வீதிகளில் தஞ்சம்
மழை நின்று பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், சத்திரங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாலும் மழையால் தஞ்சமடைந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பழைய வீடுகளில் வசிக்க முடியாதவர்கள் தெருவிலும், பிளாட்பாரங்களிலும் வசிக்க வேண்டியுள்ளது.

பனியில் தவிக்கும் மக்கள்
குழந்தைகளுடன் சில நாட்களாகவே பனியில்தான் உறங்கிவருகின்றனர். தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பாம்புகளும், பூச்சிகளும் அச்சுறுத்துவதாகவும், முறையான கழிப்பறை இல்லாததால் பெண்களும் குழந்தைகளும் அவதிப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

சாலை மறியல்
வீதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தங்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் தாங்கள் வசிக்க நிரந்தர வீடுகளை குடிசை மாற்று வாரியம் ஒதுக்க வேண்டும் என இவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் மழையால் அவதிப்படுவதாகவும், வீடுகள் ஒதுக்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு
அதே நேரத்தில் சென்னையில் அடையாறு ஆறு மற்றும் கூவம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜார்ஜ் டவுன், அமைந்தகரை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேகவதி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர். நகர், திருப்பருத்திக்குன்றம், நாகலத்து மந்தைவெளி தெரு, கணேஷ் நகர், காமராஜ் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிளில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

அதிரடி அகற்றம்
சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் நகர், காமாட்சி நகர், சதாவரம் பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தோட்டங்கள் அகற்றப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

புறநகருக்கு செல்ல மறுப்பு
சென்னையில் ஆற்றங்கரையோரம் வசித்த மக்களுக்கு துரைப்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், தலைமுறை தலைமுறையாக இங்கே தங்கியிருந்த தங்களை புறநகருக்கு அனுப்புவது எப்படி நியாயம் என்று கேள்வி எழுப்பும் மக்கள் நகர் பகுதிகளில் மேடான இடத்தில் வீடுகள் கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மழை வெள்ளத்தை விட மக்களின் கோபத்தை சமாளிப்பதுதான் இப்போது அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications