போதைப் பொருள் கொடுத்து 2 மகள்களை அடிமையாக்கிய ஜக்கி வாசுதேவ்- முன்னாள் பேராசிரியர் பரபர புகார்
கோவை: தம்முடைய எம்.டெக், பிடெக் படித்த 2 மகள்களை ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் நிரந்தர அடிமைகளாக்கி வைத்துவிட்டார் என்று கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் யோகா ஆசிரியராகவும் குருவாகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான் உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஈஷா மையத்தின் மீது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் மகள்கள் கீதா, லதா இருவரும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்தனர். எம்.டெக்., பி.டெக் முடித்து பெரிய நிறுவனங்களில் பணி புரிந்த இவ்விருவரையும், மூளைச் சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி, நான்தான் கடவுள் எனச் சொல்லி நயவஞ்சகமாக ஏமாற்றி விட்டார் ஜக்கி வாசுதேவ் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், மகள்கள் இருவரையும் அடிமை போல நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ் என்றும் கூறியிருக்கிறார் காமராஜ்.
அமாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து, 30 கி.மீ. தூரம் நடக்க வைத்து கொடுமைப்படுத்துகிறார். ஈஷா மையத்துக்கு வருபவர்களை கவர்வதற்காக, தன் மகள்கள் இருவரையும் விற்பனையாளரைப் போல பயன்படுத்துகிறார். ஈஷா பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுப்பதால், பெற்றோரை பார்க்கும் போது சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால், அந்தக் குழந்தைகள் கோமா நிலைக்குத் தள்ளப்படுவர்; ஆகையால் மகள்களை மீட்டுத் தர வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.