நாய்கள், மாடுகள் உலவுமிடமாக மாறிய கலாம் சமாதி.. நினைவிடத்தை மறந்து போன மத்திய அரசு!
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மறைந்து 5 மாதங்களாகி விட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேஸ்வரம், பேய்க்கரும்பு ஸ்தலத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் அந்த இடம் இப்போது புனிதத்தை இழந்து வருகிறது. ஆடு மாடுகள் மேய்கின்றன. நாய்கள் திரிகின்றன. நினைவிடம் அமைப்பது குறித்து மத்திய அரசு வாயே திறக்காமல் இருப்பது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
பேய்க்கரும்பு என்ற இடத்தில்தான் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. அந்த இடம் தற்போது மக்கள் தவறாமல் வரும் இடமாக மாறியுள்ளது. ஆனால் அந்த இடத்தின் பராமரிப்புதான் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆரம்பத்தில் நல்ல கவனிப்பின் கீழ் இருந்த இந்த இடம் தற்போது புறக்கணிப்புக்குரியதாகியுள்ளது.
இங்கு நினைவிடம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. சத்தத்தையே காணோம்.
நாய்களும் மாடுகளும்
கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாடுகள் திரிகின்றன. நாய்கள் திரிகின்றன. குப்பைகள் குவிந்து வருகின்றன. பேப்பர்களும், பிளாஸ்டிக் குப்பையும் அதிகமாக உள்ளது.
பார்வையாளர்கள் கூட்டம்
இங்கு வரும் பார்வையாளர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும் தாண்டி உள்ளே போய் புகைப்படம் எடுக்கிறார்கள். இதனால் அந்த இடத்திற்கான மரியாதை குறைந்து போய் விட்டது.
கலாம் குடும்பத்தினர் அதிருப்தி
அப்துல் கலாமின் சமாதி இப்படி கவனிப்பின்றி இருப்பது கலாம் குடும்பத்தினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து கலாமின் 99 வயது மூத்த சகோதரர் ஏபிஜேஎம் மரைக்காயர் கூறுகையில், இங்கு கலாம் உடலை நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசுதான் விரும்பியது. இதை நாங்களும் ஏற்றுக் கொண்டோம். இல்லாவிட்டால் ராமேஸ்வரத்தில் உள்ள அபில் கபில் தர்காவிலேயே குடும்ப பாரம்பரியப்படி அடக்கம் செய்திருப்போம். அதை நாங்களாவது முறைப்படி பராமரித்திருப்போம் என்று வருத்தப்பட்டார்.
அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள்
மரைக்காயர் மேலும் கூறுகையில், அரசியல்வாதிKள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள். அவர் மறைந்ததுமே அவர்கள் மறந்து விட்டார்கள். நாங்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.
மக்களே கட்டுவார்கள்
இந்த வயதில் நான் இதற்காக ஓடியாடி பாடுபட முடியுமா. அரசுக்கு உரிய நினைவிடம் கட்ட மனதில்லை என்றால் ராமேஸ்வரம் மக்களே சேர்ந்து கலாம் ஆதரவாளர்களுடன் இணைந்து அவருக்கான நினைவிடத்தை அமைப்பார்கள் என்றார் அவர்.
போலீஸாருக்குப் பாராட்டு
கலாம் குடும்பத்தினர் கூறுகையில், போலீஸார் இங்கு 24 மணி நேரமும் காவலில் உள்ளனர். அவர்களைப் பாராட்ட வார்த்தையே இல்லை. அவுட்போஸ்ட் அமைத்து இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த இடத்தை சுத்தம் செய்வது போலீஸாரின் வேலை இல்லை.
3 நாளைக்கு ஒருமுறைதான்
இந்த இடத்தை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நிறையப் பேர் வருகின்றனர். எனவே இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த இடம் மரியாதைக்குரியதா்கவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றனர்.
டிஎஸ்பி பேட்டி
ராமேஸ்வரம் டிஎஸ்பி முத்துராமலிங்கம் கூறுகையில், இங்கு எங்களுக்கான பணி பாதுகாப்பு தருவது மட்டுமே. இந்த இடத்தை பராமரிக்கும் வேலை முழுவதும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ்தான் வருகிறது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை, விழாக்காலங்களில் பெருமளவில் கூட்டம் வருகிறது என்றார்.
எம்.பி. அன்வர் ராஜாவின் கவலை
ராமநாதபுரம் தொகுதி எம்.பியான அதிமுகவைச் சேர்ந்த அன்வர் ராஜா இதுகுறித்து டெல்லியில் இருந்து நம்மிடம் பேசுகையில், தன்னால் ஆன அனைத்தையும் தமிழக அரசு செய்து விட்டது. அதையும் குறுகிய காலத்தில் நாங்கள் செய்து முடித்துள்ளோம்.
1.5 ஏக்கர் நிலம்
இந்த இடத்தில் டாக்டர் கலாமுக்கு நினைவிடம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். மேலும் டாக்டர் கலாமைக் கெளரவிக்கும் வகையில், பல நடவடிக்கைகளையும் எங்களது தலைவர் ஜெயலலிதா எடுத்துள்ளார். இனி மேற்கொண்டு செய்ய வேண்டியதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில்
இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் நான் நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரின்போது கூட பேசினேன். ஆனால் பாஜக அரசிடமிருந்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. டாக்டர் கலாமைக் கெளரவிக்கும் வகையில் ராமேஸ்வரத்திலோ அல்லது டெல்லியிலோ பாஜக அரசு எதையுமே செய்யவில்லை. இது மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசுதான் செய்ய வேண்டும். இந்தத் தாமதம் நியாயமற்றது என்றார் அன்வர் ராஜா.
பதிலளிக்க மறுக்கும் மத்திய அரசு
அன்வர் ராஜா மேலும் கூறுகையில், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் விளக்கம் கேட்டும் கூட மத்திய அரசு பதிலளிக்க மறுக்கிறது.எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமீபத்தில் சமாதி உள்ள இடத்தில் உயர்ந்த கோபுரத்துடன் கூடிய விளக்கு வசதி செய்து தரப்பட்டது. மேலும் பேய்க்கரும்பு பகுதியில் ஒரு பஸ் ஸ்டாப்பும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும்.
பாதுகாப்புத்துறைதான்
மத்திய அரசின் பாதுகாப்புத்துறைதான் நினைவிடம் அமைக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றார் அன்வர் ராஜா.
பாதுகாப்புத்துறை மெளனம்
இதுகுறித்து உறுதி செய்ய டிஆர்டிஓ தலைவர் கிறிஸ்டோபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி ஆகியோரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நமக்குப் பதில் கிடைக்கவிவில்லை.
வித்தியாசமாக இருக்க வேண்டும்
வழக்கமான நினைவிடமாக அது இருக்கக் கூடாது. கலாம் ஒரு மாபெரும் மனிதர். அவருக்கு நினைவிடம் அமைக்க இத்தனை காலம் தாமதம் என்பதை ஏற்க முடியாது. மக்களின் ஜனாதிபதியை நிராகரிக்கக் கூடாது.
அரசின் அலட்சியம்
கலாம் மறைந்து ஐந்து மாதங்களாகியும் கூட அவரது அடக்க ஸ்தலம் இன்னும் தற்காலிக கொட்டகையின் கீழ் இருப்பது அதிர்ச்சி தருகிறது. இது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. மக்களின் ஜனாதிபதியின் கெளரவத்திற்கு உகந்ததல்ல இது. இங்கு ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்று மாநில அரசிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அதை அரசே நடத்த வேண்டும். இப்பகுதி மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.
நிலம் கொடுத்து விட்டோம் - கலெக்டர்
ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் ஒன்இந்தியாவிடம் பேசுகையில், மாவட்ட நிர்வாகம் நினைவிடம் அமைப்பதற்காக 1.5 ஏக்கர் நிலத்தை மாநில அரசின் உத்தரவிந் பேரில் உடனடியாக ஒதுக்க விட்டோம். டிஆர்டிஓ அதிகாரிகள் சென்னையிலி்ருந்து வந்து இடத்தையும் பார்வையிட்டுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சர்வே செய்து முடித்துள்ளனர்.
என்ன செய்யப் போகின்றன அரசுகள்?
மத்திய அரசும், மாநில அரசும் கலாமின் கெளரவத்திற்கு குந்தகம் ஏற்படாமல் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.