எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.. தினகரன் குரூப்பின் அடுத்த அதிரடி!
தினகரன் தரப்பு விரைவில் சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தர திட்டமிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஆளுநரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தர தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆளுநரிடம் தினகரன் தரப்பு 19 எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். ஆனால் ஆளுநரோ முதல்வரை எம்.எல்.ஏக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறி கையை விரித்துவிட்டார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதையடுத்து சபாநாயகரிடம் தினகரன் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தர திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 234. 10% எம்.எல்.ஏக்கள் இணைந்தால்தான் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகரிடம் தர முடியும்.
5 எம்.எல்.ஏக்கள் தேவை
தற்போது தினகரன் தரப்பில் 19 எம்.எல்.ஏக்கள்தான் வெளிப்படையாக உள்ளனர். இன்னமும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு தேவை.
ஓஎஸ் மணியன் தரப்பு
சசிகலாவை நீக்கும் வைத்திலிங்கத்தின் கருத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தரப்பில் 5 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களைக் கொண்டு சபாநாயகரிடம் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தர தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு கவிழும்...
தினகரன் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் நிலையில் அதை திமுகவும் ஆதரிக்கும் என்றே தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழ்வது உறுதி என்றே கூறப்படுகிறது.