உளுந்தூர்பேட்டையில் நிற்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், 2011 சட்டசபைத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
தேமுதிக மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 85 தொகுதிகளுக்கு வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது.
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேமுதிகவின் 6ம் கட்ட வேட்பாளர் பட்டியில் இன்று வெளியிடப்பட்டது அதில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக 6வது கட்ட வேட்பாளர் பட்டியல்
1) உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த்
2) சங்கராபுரம் - கோவிந்தன்
3) உடுமலைப்பேட்டை - கணேஷ்குமார்
4) விழுப்புரம் - வெங்கடேசன்
5) மேட்டூர் - பூபதி
6) ஆத்தூர் - பாக்கியா செல்வராஜ்
7) மன்னார்குடி- முருகையன்பாபு
8) ரிஷிவந்தியம் - வின்சென்ட் ஜெயராஜ்
9) விராலிமலை - கார்த்திகேயன்
10) திண்டிவனம் - உதயகுமார்
11) ஒரத்தநாடு - டாக்டர் ப.இராமநாதன்
இதற்கு முந்தைய தேர்தல்களில் விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி களில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், ரிஷி வந்தியம், சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை ஆகிய தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவித்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. அதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது. எனவே விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டால் மனிதநேய மக்கள் கட்சியால் விஜயகாந்த்தை சமாளிக்க முடியாது என கருதியே தி.மு.க. அத்தொகுதியை அக்கட்சியிடம் இருந்து கேட்டு பெற்று உள்ளது. வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது.
இந்த தேர்தலில் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க. கடும் முயற்சி மேற்கொண்டது. அவருடன் ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால் விஜயகாந்தின் ஏற்க முடியாத நிபந்தனைகளால் கூட்டணி அமையவில்லை. திடீர் என்று மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் விஜயகாந்த் நிராகரித்து விட்டாரே என்று தி.மு.க. தரப்பு விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியில் உள்ளது. எனவே அவரை தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கி உள்ளது.
இதற்கான வியூகம் வகுத்துதான் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளருக்குப் பதில் தி.மு.க.வே களத்தில் குதித்து இருப்பதாக தெரிய வருகிறது. தற்போது விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நிற்பது உறுதியாகியுள்ளதை அடுத்து வசந்தவேலுவை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் தி.மு-.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவதால் அதிமுகவும் தனது வேட்பாளரை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியாகியுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக, திமுக மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. போட்டியை சமாளித்து வெற்றி முரசு கொட்டுவாரா விஜயகாந்த்? மே 19ம் தேதி தெரியவரும்.