ஸ்டாலின் சட்டம் படித்த வக்கீல் அல்ல: ஓபிஎஸ் காட்டம்
ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்று திமுக செயல் தலைவர் கூறியது பற்றி கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'ஸ்டாலின் சட்டம் படித்த வக்கீல் அல்ல' என்று கூறியு
நாகர்கோவில்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்று திமுக செயல் தலைவர் கூறியது பற்றி கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'ஸ்டாலின் சட்டம் படித்த வக்கீல் அல்ல' என்று, நாகர்கோவிலில் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தை, அரசு நினைவிடமாக மாற்றி, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவதாக, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த விவாதங்கள் அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், லண்டன் சென்று சென்னை திரும்பிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், 'ஜெயலலிதா இல்லத்தை அரசு சார்பில் நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு' என்று கூறினார்.
ஓபிஎஸ் காட்டம்
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், " ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்குவது குறித்து கருத்து சொல்ல, ஸ்டாலின் சட்டம் படித்த வக்கீல் அல்ல. அதிமுக அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும்" என்று கூறினார்.
சட்ட சிக்கல்கள்
ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதில், பல்வேறு சட்டப் பிரச்னைகளை, அரசு சந்திக்க வேண்டியது வரும் என்றே கூறப்படுகிறது.
சட்டம் சொல்வது இதுதான்
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட நிபுணர்கள், " ஒருவருக்கான சொத்து உரிமை பற்றி, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அல்லாமல், அந்த சொத்தை, அவரிடம் இருந்து பறிக்க முடியாது என, தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நட்ட ஈடு
இந்த உரிமை, அரசியலமைப்பு சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.பொது நோக்கத்துக்காக, ஒரு சொத்தை அரசு கையகப்படுத்த முடியும்; அதாவது, தொழிற்பேட்டை, சந்தை, குடியிருப்புகள் கட்ட என, ஒரு பொது நோக்கம் இருக்க வேண்டும். அதற்காக நிலத்தை எடுக்கும்போது, உரிமையாளருக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், இங்கே பொது நோக்கம் என, எதை குறிப்பிடுகின்றனர். சொத்தின் உரிமையாளராக வருபவர் எதிர்ப்பு தெரிவித்தால், அரசுக்கு சிக்கல் தான். உரிமையாளராக வருபவர் ஒப்புதல் அளித்தால், வீட்டை நினைவிடமாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது." என்று கூறுகிறார்கள்.