தேமுதிகவுடன் பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எதிராக திமுக வக்கீல் நோட்டீஸ் !
சென்னை: தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக திமுக பேரம் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி இருந்தார். இதனை நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேமுதிகவுடன் பேரம் நடந்ததாக வைகோ கூறியதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை பின்னர் எப்படி பேரம் நடந்திருக்கும். திமுக மீது வைகோ அபண்டமான குற்றச்சாட்டை கூறிவருகிறார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஏற்கனவே பதில் அளித்துள்ளார். மேலும் வைகோ மீது திமுக தலைவர் கருணாநிதி சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழக்கறிஞர்கள் மூலம் வைகோவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் திமுக குறித்து வைகோ தொடர்ந்து அவதூறு பேசி வருவதாக நோட்டீசில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திமுக குறித்த அவதூறு கருத்தை ஒரு வாரத்திற்குள் வைகோ திரும்ப பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் வைகோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.