திமுக அணியில் சிவகாமிக்கு பெரம்பலூர்; என்.ஆர். தனபாலனுக்கு பெரம்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் சமூக சமத்துவ படை கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5, புதிய தமிழகம் கட்சிக்கு 4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சிக்கு தலா 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 58 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில் சமூக சமத்துவப் படையின் தலைவர் சிவகாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர். தனபாலன் ஆகியோர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகளுக்குமான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.
சமூக சமத்துவப் படைக்கு பெரம்பலூர் (தனி) தொகுதியும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.