கூட்டணி விவகாரம்... தி.மு.க.வில் கனஜோராக உள்குத்து? புதிய பலியாடு டி.கே.எஸ். இளங்கோவன்?
சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியால் எழுந்த சர்ச்சையானது அக்கட்சியின் உட்கட்சி மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளதாகவே சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் அக்கட்சி மேலிட விவகாரங்களில் சிக்கிய புதிய பலியாடு இளங்கோவனோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தி.மு.க.வில் உட்கட்சி மோதல் என்பது ஒவ்வொரு கட்டமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை மு.க.ஸ்டாலின் தரப்பு மேற்கொண்டது. ஆனால் அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க. அழகிரியோ இதற்கு கடுமையாக எதிர்ப்பு பகிரங்கமாக பேட்டியளித்தார்.
அழகிரி
இதனால் தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி அமையாமல் போனது. பின்னர் ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் தி.மு.க.வை விட்டே மு.க. அழகிரி நீக்கப்பட்டார்.
கலியாணசுந்தரம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலராக இருந்த கலியாணசுந்தரம் கலகக் குரல் எழுப்பினார். அது ஸ்டாலினின் தூண்டுதலால்தான் வெளிப்படுத்தப்பட்ட கருத்து எனக் கூறப்பட்டது. கடைசியாக கட்சியைவிட்டே கலியாணசுந்தரம் நீக்கப்பட்டார்.
இளங்கோவன்
இந்த நிலையில் இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிடக் கூடும்; ஜாதி கட்சிகளான பா.ம.க., விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் சேர்க்காது என்பது போன்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யதார்த்தம்
தி.மு.க. ஜெயிக்க வாய்ப்பிருந்த நிலையில் 2006ஆம் ஆண்டு தேர்தலிலே கூட கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட்டுகளைப் பங்கு போட்டு கொடுத்து 130 இடங்களில்தான் தி.மு.க. போட்டியிட்டது. இதில் 96 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியையும் அமைத்தது அக்கட்சி. ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக இருக்கிறது. அத்தனை கூட்டணிக் கட்சிகளையும் இழுத்துக் கொண்டு ஒரு மெகா கூட்டணி அமைத்தால்தான் தி.மு.க. அரியணை ஏற முடியும் என்பது யதார்த்தம்.
கற்பனை
ஆனால் தி.மு.க.விலே இருக்கும் சிலரோ கடந்த முறை அ.தி.மு.க வென்றது; இந்த முறை தி.மு.க.தான் வெல்லும்; இப்படித்தான் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் இருந்து வருகிறது; அதெப்படி இப்ப மட்டும் மாறும்? அதனால் ஒன்றிரண்டு கூட்டணி கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு பெரும்பான்மை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடலாம் என கூறிவருகிறது.
இதை எதிரொலிக்கும் விதமாகவே டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியும் இன்று வெளியானது. இது தி.மு.க. மேலிடத்தைக் கொந்தளிக்க வைத்ததாக தெரிகிறது.
புதிய பலியாடு
இந்த கோபத்தில்தான் உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியானதுடன், தலைமைக் கழகத்தில் பேட்டியளிப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அன்று கலியாணசுந்தரத்தைப் போல இன்று புதிய பலியாடாக இளங்கோவனை நிறுத்தியிருக்கிறார்கள்...
கள யதார்த்த நிலைமைக்கு அப்பால் மிதமிஞ்சிய நம்பிக்கையோடு இருக்கும் தி.மு.க.வின் ஒரு தரப்பினர் போக்கு அக்கட்சி மேலிடத்தை கதிகலங்க வைத்திருப்பதையே இன்றைய உடனடி மறுப்பறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.