மழைக்கு தாங்காத சென்னை... சாலைகளில் தேங்கிய வெள்ளம்... டிராபிக் நெரிசலால் மக்கள் அவதி
நேற்று பெய்த கனமழைக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்தது. மழை காரணமாக சென்னை சாலைகள் மீண்டும் பாதிப்படைந்துள்ளன. சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாலைகள், மேலும் மோசமடைந்துள்ளன. சென்னையின் பல குடியிருப்புகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னையின் பல இடங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது.
சென்னையின் பிரதான பகுதியான எழும்பூர், சேத்துப்பட்டு, சூளைமேடு, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் , புரசைவாக்கம், மயிலாப்பூர் சிவசாமி சாலை, ஜிபிசாலை, ஆகிய பகுதிகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கியது. அதே போல சோழிங்கநல்லூர், தாம்பரம், பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, மத்திய கைலாஷ், டைடல் பார்க் இந்தப்பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன.
பட்டுல்லாஸ் சாலை முழுதும் பெயர்ந்து பெரும் பள்ளங்களுடன் காணப்படுகிறது. மயிலாப்பூர் சிவசாமி சாலையும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. சென்னை வேளச்சேரி பிரதான சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேக்கம்
வடசென்னை பகுதிகளில், குறிப்பாக, வியாசர்பாடியில் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு மாநகராட்சி வைத்த மழைநீர் அகற்றும் பம்புகள் வேலை செய்யவில்லை. இதனால் மழைநீர் வடியவில்லை என்கிறார்கள் பகுதிவாசிகள்.
தொற்றுநோய் அபாயம்
அதே போல் எழில் நகர் குப்பை கொட்டும் வளாகம் அருகே சூழ்ந்த மழைநீர் வடியாததால் குப்பைகள் மழைநீருடன் கலந்து பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
விமான நிலைய ஓடுதளங்களில் தண்ணீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிய கனமழையால் விமான நிலைய ஓடுதளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதமானது.
திருப்பிஅனுப்பப்பட்ட விமானங்கள்
மாலை 5 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் ஹைதராபாத்துக்கும், மாலை 5.30 மணிக்கு தோகாவில் இருந்து வந்து சென்னையில் தரையிறங்க வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் திருவனந்தபுரத்துக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
இரண்டு மணிநேரம் விமானங்கள் தாமதம்
மேலும், சென்னையில் இருந்து கொல்கத்தா, கொழும்பு, டெல்லி, புனே உட்பட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும், மற்ற நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் தரையிறங்குவதிலும் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.