சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது- 116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் அதிகாரப்பூர்வமாக ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முதல்வர் எடப்பாடி அரசுக்கு தற்போது 116 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.
சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்..ஏக்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 233 பேர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர்.
அதிமுக 135 எம்.எல்.ஏக்கள்
அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 135. அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரையும் உள்ளடக்கியே 135 எம்.எல்.ஏக்கள்.
116 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு
இவர்களில் 19 பேர் தற்போது ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆகையால் எடப்பாடியார் அரசுக்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது.
பெரும்பான்மை இல்லை
சட்டசபையில் தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் எடப்பாடியார் அரசுக்கான ஆதரவை தினகரன் எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றதால் இந்த பெரும்பான்மையை இழந்துவிட்டது எடப்பாடி அரசு.
திமுக பலம்
சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்,எல்.ஏக்கள் எண்ணிக்கை 98. ஒருவேளை திமுக அணியும் தினகரன் தரப்பும் இணைந்தால் தற்போதைய நிலையில் 117 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் திமுக அதை செய்யுமா? என்பது கேள்விக்குறிதான்.