தூத்துக்குடி குடிநீர் திட்டத்தால் தாமிரபணி விவசாயம் அழியும் அபாயம்...!
தூத்துக்குடி: தூத்துக்குடி நான்காவது குடிநீர் திட்டத்தினால் தாமிரபரணி பாசனத்தில் விவசாயம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இந்தத் திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தையும் புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமிரபரணியை நம்பி
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாயர்புரம், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர்., கால்வாய், குரும்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப்பணிகள் தாமிரபரணி பாசனத்தை நம்பியே நடந்து வருகிறது. தாமிரபரணியில் தண்ணீர் இல்லாவிட்டால் இப்பகுதிகளில் நெல் விளைச்சலும் இருக்காது.
46,000 நன்செய் நிலங்கள்
தாமிபரணியின் 7வது அணையான மருதூர் அணையின் மேலக்கால், கீழக்கால் மற்றும் 8வது அணையான ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் பாசனங்களை நம்பி 46ஆயிரத்து 107ஏக்கர் நன்செய் விவசாய நிலங்கள் உள்ளன.
இவை இன்றுவரை தூர் வாரப்படாத நிலையில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீரை சேமிப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
தூத்துக்குடிசிக்கு மருதூர் அணையிலிருந்து குடிநீர்
இதற்கிடையே மருதூர் அணைக்கு அடுத்துள்ள பகுதியில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோக வல்லநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் எடுப்பதற்கான உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் உறை கிணறுகள்
இதுபோன்று முத்தாலங்குறிச்சி, கருங்குளம், பொன்னன்குறிச்சி, ஆழ்வார்தோப்பு, ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருக்கான உறைகிணறுகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு நாள்தோறும் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3பைப்லைன்கள் போக சுமார் ஆயிரத்து 83கிராமங்களுக்கு மருதூர் அணைக்கு அடுத்தபடியான பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
4வது திட்டத்திற்கு அனுமதி
இந்நிலையில், மருதூர் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சியின் 4வது பைப்லைன் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழிந்து விடும் விவசாயம்
இந்த திட்டத்திற்காக மருதூர் அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 9.70கோடி லிட்டர் தண்ணீர் எடுத்தால் தாமிரபரணி பாசனத்தில் விவசாயம் முற்றிலும் அழிவதுடன் மருதூர் அணையில் இருந்து கீழ்பகுதிக்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகிவிடும்.
தரிசாக மாறி வறண்டு போய் விடும்
இதனால் 46ஆயிரத்து 107ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறுவதுடன், கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்களும் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
இந்நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார்குலசேகரன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.