தொடர் மழை எதிரொலி: சென்னை ஆவடி வெள்ளானூர் ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதால், ஆங்காங்கே வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 நாள் கனமழையால் நிறைந்த ஆவடி வெள்ளனூர் ஏரி கரை உடைந்து வெள்ளப்பெருக்கு
திருவள்ளூர்: தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் 3 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழைக்கு தாங்காத ஆவடி வெள்ளனூர் ஏரி உடைந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுக்க கனமழை வெளுத்து வாங்கியது. நல்ல மழை பெய்ததால் ஆவடியில் உள்ள வெள்ளனூர் ஏரி நிறைந்து உடைந்தது. இதனையறிந்த வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கனமழை எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் வேகவேகமாக நிரம்பி வருகின்றன. சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 5 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 5 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 60 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இப்போது வரை தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை 221 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் மாலை நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்களும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.