ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும்: மாஃபா பாண்டியராஜன்!
நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தினகரன் கொடுத்த கெடு முடிவடைய உள்ள நிலையில் ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக கூறிவிட்டது ஓபிஎஸ் அணி.
ஆனால் நிபந்தனைகளை ஏற்பது குறித்து இதுவரை வாய்திறக்காத ஈபிஎஸ் அணி இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கூறிவருகிறது.
வெளிப்படையாக கூற வேண்டும்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து ஈபிஎஸ் அணி வெளிப்படையாக கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தானாக பேச்சுவார்த்தை தொடங்கும்
ஈபிஎஸ் அணி வெளிப்படையாக அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி போல் ஆட்சி நடைபெறவில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
பதவிக்காக ஆசைப்படவில்லை
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் பதவிக்காக ஆசைப்படவில்லை என்றும் அவர் கூறினார். மறைமுகமாக பேசுவது அணிகள் இணைப்புக்கு வழிவகுக்காது என்றும் மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
விரைவில் பேச்சுவார்த்தை
மாஃபா பாண்டியராஜனின் இந்த பேச்சு ஈபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என அழைப்பதை உள்ளது. இதனால் ஓபிஎஸ் அணியிடம் ஈபிஎஸ் அணியினர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.