கைதான இளைஞர்கள் விடுதலையாக மறுப்பு.. உள்ளிருப்பு போராட்டம் தீவிரம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் விடுதலையாக மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: வாடிப்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலையாக மறுத்துள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 48 பேர் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 30 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு வழியில் போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 127 பேர் விடுதலையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும் வரை மண்டபத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைதானவர்கள் விடுதலையாக மறுப்பு தெரிவித்ததையடுத்து பிரச்சனை இடியாப்பச் சிக்கலாக மாறியது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் விழித்து வருகின்றனர்.