2ம் நம்பர் சென்டிமெண்ட் + புதன்ஹோரையில் சசியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ஜெ
சென்னை: சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா, சரியாக தனது 2ம் நம்பர் சென்டிமெண்ட்படி 12 மணி 26 நிமிடத்தில் புதன்ஹோரையில் கையெழுத்துப்போட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் உடனிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா, எந்த காரியமாக இருந்தாலும் தனது ராசி மற்றும் ஜோசியர்களின் ஆலோசனைப்படித்தான் நடந்து கொள்வார். கூட்டணியாகட்டும், தேர்தல் பிரசாரமாகட்டும், வேட்பு மனு தாக்கலாகட்டும் எல்லாம் ஜோசியர்களின் ஆலோனைகள்படிதான்.
ஜெயலலிதா தான் செய்யும் செயலை புதன்ஹோரை பார்த்து செய்கிறார். கடந்த மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்ற போது சனிக்கிழமை 11 மணிக்கு பதவியேற்றார். அதேபோல ஏப்ரல் 9ம் தேதியன்று 11 மணிக்கு ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறக்க உத்தரவிட்டார்.
வேட்புமனு தாக்கல்
திங்கட்கிழமையான இன்று 10.30 மணிமுதல் 12 மணிவரை எமகண்டம் என்பதால் பெரும்பாலானோர் மனு தாக்கல் செய்யவில்லை. 12 மணிமுதல் 1 மணிவரை புதன்ஹோரை நேரம் என்பதால் அந்த நேரத்தில் போயஸ்கார்டனை விட்டு கிளம்பிய ஜெயலலிதா சரியாக 12.26 மணிக்கு வேட்புமனு படிவத்தில் கையெத்து போட்டார்.
7ம் நம்பர் சென்டிமெண்ட்
கடந்த 2011 தேர்தல் கால கட்டத்தில் அவரது ராசி எண் 7 ஆக இருந்தது . அதனால்தான் அதிமுக சார்பில் 160 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தினார் அவர். இதன் கூட்டுத்தொகை 7. முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16. அவர் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 34. இவை களின் கூட்டுத்தொகை 7. முதல்வராக பொறுப் பேற்றதும் முதன் முதலில் கையெழுத்திட்ட கோப்புகளின் எண்ணிக்கையும் 7தான்.
மாறிய ராசி எண்
கடந்த சில ஆண்டுகளாக ஜெயலலிதாவின் ராசி எண் 5ஆகவும், 2 ஆகவும் மாறியது. எனவேதான் ஆர்.கே.நகர் தொகுதியை தேர்வு செய்த ஜெயலலிதா, 227 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளார். ஆனாலும் புதன்ஹோரையில்தான் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
25-04-2016 கூட்டுத்தொகை 2
இன்று வேட்புமனு தாக்கல் செய்வதிலும் 2ம் நம்பர் சென்டிமெண்ட் படியும், புதன்ஹோரையிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா. இந்த நம்பர் சென்டிமெண்ட் இம்முறையும் ஜெயலலிதாவிற்கு கைகொடுக்குமா பார்க்கலாம்.
வெற்றியின் சின்னம்
வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த ஜெயலலிதாவைப் பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அவர்களுக்கு வெற்றி நமதே என்று கூறும் வகையில் இரட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு சிரித்துக்கொண்டே காரில் ஏறி சென்றார் ஜெயலலிதா.