கருணாநிதியின் மெழுகுசிலை... முரசொலி அலுவலகத்தில் வியக்கவைத்த திமுக!
முரசொலி பவளவிழா கொண்டாட்டத்தில் திமுக சார்பில் செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடு தொண்டர்களை குஷியடைய வைத்துள்ளது.
சென்னை : முரசொலி பவளவிழாவையொட்டி கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் மெழுகுச் சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது, அவரே அந்த அறையில் அமர்ந்து எழுதுவது போல உள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி பத்திரிக்கை தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி இன்றும் நாளையும், சிறப்பான விழாவிற்கு திமுக ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் இன்று காலையில் கண்காட்சியுடன் பவளவிழா கொண்டாட்டம் தொடங்கியது. தி இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமிணி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முரசொலி அலுவலகத்தில் வழக்கமாக கருணாநிதி வந்து அமர்ந்து கட்டுரை எழுதும் அறையில் அவரைப் போன்றே ஒரு தத்ரூபமான மெழுகுச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து கருணாநிதியே அந்த அறையில் அமர்ந்திருப்பது போல தத்ரூபமாக உள்ளது மெழுகுச் சிலை என்று தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.