தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 234 தொகுதிகளில் 5268 பேர் போட்டி
சென்னை: தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைந்தது. மொத்தம் 5268 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாள்களில் சேர்த்து 861 பேரும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 191 பேரும் மனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை வரையில் மொத்தமாக 2 ஆயிரத்து 112 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். நேற்றைய தினம் அதிமுகவைச் சேர்ந்த 233 வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஏப்30ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான மே2ஆம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்று மதியம், 2.30 மணியோடு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. புதுச்சேரி, கேரள மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் இன்றோடு முடிவடைந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5268 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் உள்ள தொகுதிகளில் மொத்தம் 336 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 228 பேரும், நெல்லை மாவட்ட தொகுதிகளில் 221 பேரும், கோவை மாவட்ட தொகுதிகளில் 229 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பெண்கள் 572 பேராகும். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த திருநங்கைகள் 2 பேர் களத்திலுள்ளனர். இதில் ஒருவர் ஆர்.கே.நகரிலும், மற்றொருவர் மதுரை தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திண்டிவனம் மற்றும் பேராவூரணி தொகுதிகளில் குறைந்த அளவாக தலா 8 பேர் களத்தில் உள்ளனர்.